"ஐரோப்பாவை விட இந்தியா தான் பெஸ்ட்".. திருவனந்தபுரத்தில் பயிற்சி பெற்ற மலேசிய ஓட்டப்பந்தய வீரர்கள்
"ஐரோப்பாவை விட இந்தியா தான் பெஸ்ட்".. திருவனந்தபுரத்தில் பயிற்சி பெற்ற மலேசிய ஓட்டப்பந்தய வீரர்கள்
டெல்லி: ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் வரும் செப்டம்பர் 19 முதல் தொடங்கவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தயாராகும் வகையில், மலேசிய நாட்டின் முன்னணி நடுத்தர மற்றும் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) எல்என்சிபிஇ (LNCPE) மையத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த முகாம் செப்டம்பர் 10 அன்று நிறைவடைந்தது. இதில் 800 மீட்டர் வீரர் வான் முகமது ஃபஸ்ரி மற்றும் 400, 800 மீட்டர் வீரர் உமர் உஸ்மான் ஆகியோர் தங்களது தலைமைப் பயிற்சியாளர் முகமது அசாருதீன் வழிகாட்டுதலில் தீவிர பயிற்சி பெற்றனர்.
மலேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளரான முகமது அசாருதீன், ஒரு முன்னாள் இந்திய தடகள வீரர் ஆவார். இது குறித்துப் பேசிய அவர், "நான் 2020 முதல் 2025 வரை இந்திய தேசிய அணியில் ஒரு பகுதியாக இருந்தேன். பின்னர் பெங்களூரு சாய் மையத்தில் இருந்து விலகி மலேசிய தடகள அணியில் தலைமைப் பயிற்சியாளராக இணைந்தேன். எனவே நான் மீண்டும் இந்தியாவிற்கு வந்திருப்பது எனக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை. இந்தியாவில் உள்ள விளையாட்டு கட்டமைப்புகள் மிக உயர் தரத்தில் உள்ளன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எனவே மலேசிய தடகள வீரர்களுக்கு சிறந்த அனுபவம் கிடைக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது" என்று தெரிவித்தார்.
தனது மலேசிய வீரர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்ததன் நோக்கம் குறித்துப் பேசிய அவர், "முதல் விஷயம் சர்வதேச அளவிலான அனுபவம் பெறுவது; இந்தியாவின் தரநிலைகள் என்ன என்பதை வீரர்கள் நேரில் அறிந்து கொள்வது. இந்தியாவில் எத்தகைய உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் உள்ளன என்பதை மலேசிய நடுத்தர மற்றும் நீண்ட தூர தடகள வீரர்கள் பார்க்க வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கமாகும். இரண்டாவது விஷயம், இந்திய வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெறுவது. இந்திய வீரர்களுடன் களத்தில் இணைந்து பயிற்சி செய்வதும், போட்டியிடுவதும் மலேசிய வீரர்களுக்கு மிகப்பெரிய பலனைத் தரும்" என்றார்.
ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து இந்தியாவைத் தேர்வு செய்தது குறித்துப் பேசிய அசாருதீன், "ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தயாராவதில் இது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஐரோப்பிய நாடுகளையோ அல்லது ஐரோப்பிய தரம் கொண்ட பிற நாடுகளையோ நான் தேர்வு செய்யவில்லை. ஏனெனில் எங்களைப் பொறுத்தவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள்தான் முக்கியம்" என்று கூறினார்.
இந்தியாவில் தங்கியிருந்த போது, கடந்த ஆகஸ்ட் 22 அன்று புவனேஸ்வரில் நடைபெற்ற உலக தடகள கான்டினென்டல் டூர் போட்டியிலும் இந்த மலேசிய வீரர்கள் பங்கேற்றனர். இது குறித்துப் பேசிய பயிற்சியாளர், "இந்தியாவிற்கு வந்து போட்டியிடும் போது, இங்குள்ள போட்டித் தன்மையின் கடினமான நிலையை அவர்களால் உணர முடியும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த முறை இந்தியா வென்ற ஏராளமான பதக்கங்களில், பெங்களூரு சாய் மையத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் மட்டுமே 16 பதக்கங்களை வென்றிருந்தனர். எனவே, ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக, இங்குத் தங்கி இந்த வீரர்களுடன் பயிற்சி பெறுவது மலேசிய வீரர்களுக்கு மிகவும் அவசியமானது. இங்குள்ள வீரர்களுடன் போட்டியிடுவது மலேசிய வீரர்களின் ஓட்டப்பந்தய வியூகங்களையும், போட்டியை அணுகும் சிந்தனையையும் மேம்படுத்த உதவுகிறது" என்று கூறினார்.
திருவனந்தபுரம் சாய் மையத்தைப் பாராட்டிய அவர், "திருவனந்தபுரம் சாய் மையம் மிகவும் தனித்துவமானது, சிறப்பு வாய்ந்தது. இந்தியாவுக்காக ஆடிய பல ஒலிம்பிக் வீரர்கள் இந்த திருவனந்தபுரம் மையத்தில்தான் பயிற்சி பெற்றார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுவே இந்த மையத்திற்கு ஒரு தனித்துவத்தை அளிக்கிறது. இது ஒரு அதிர்ஷ்டகரமான பயிற்சி மையம் என்றே நான் சொல்வேன்" என்று புகழாரம் சூட்டினார்.
இரு நாடுகளின் விளையாட்டுப் பரிமாற்றம் குறித்துப் பேசிய அசாருதீன், "மலேசிய மற்றும் இந்திய தடகள அமைப்புகளுக்கு இடையே பகிரப்படும் கலாச்சாரம் மறக்க முடியாதது. இது எங்கள் வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் ஒரு சிறந்த பாடமாகும். இந்த அனுபவம் அவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். அதனால்தான் அவர்களை இங்கு அழைத்து வந்தேன். இங்கு பயிற்சி பெறுவது எப்போதும் சிறப்பானது. இதுபோன்ற பயிற்சிப் பரிமாற்றங்கள் இரு நாடுகளின் விளையாட்டுத் தரத்தையும் மேலும் உயர்த்தும்" என்றார். மலேசிய தடகள வீரர்கள் மட்டுமின்றி, நேபாள நாட்டைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் கவுகாத்தி சாய் மையத்திலும், ஈரான் நாட்டு கபடி வீரர்கள் சோனிபட் சாய் மையத்திலும் பயிற்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகும் சர்வதேச விளையாட்டு வீரர்களின் முக்கிய உயர் செயல்திறன் மையங்களாக இந்தியாவின் சாய் மையங்கள் உருவெடுத்து வருவது உறுதியாகியுள்ளது.