அகர்கர் பதவிக்கு வேட்டு வைத்த ரோஹித்.. கம்பீர் பற்றியும் புகார்.. பிசிசிஐ
அகர்கர் பதவிக்கு வேட்டு வைத்த ரோஹித்.. கம்பீர் பற்றியும் புகார்.. பிசிசிஐ-யிடம் காய் நகர்த்தல்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்து மீண்டும் பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. கடந்த மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் அவர் சதம் அடித்த பிறகு நடந்த மாற்றத்தால், தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கருக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பளிக்க வேண்டி, ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்க தேர்வுக்குழு திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், ரோஹித் சர்மாவுடன் 2 முறை ஆலோசித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளுக்குப் பிறகு தனது ஒருநாள் போட்டி ஓய்வு குறித்து முடிவெடுப்பதாக ரோஹித் தேர்வுக்குழுவுக்கு உறுதியளித்திருந்தார். ஆனால், லார்ட்ஸ் போட்டியில் சதம் அடித்த பிறகு அவர் தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.
இதனால் ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் இடையே கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, அஜித் அகர்கரை தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ரோஹித் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து பிசிசிஐ-யிடம் ரோஹித் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், இதனால் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் வி.வி.எஸ். லக்ஷ்மனை அணியின் முக்கியப் பொறுப்பிற்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
இதற்கு முன்பும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இதே போன்ற சர்ச்சைகள் எழுந்தன. அப்போதும் அவர் தொடர்ந்து விளையாட விரும்பிய போதும், தேர்வுக்குழுவினர் தங்களின் முடிவில் உறுதியாக இருந்தனர்.
இதற்கிடையே, பிசிசிஐ தரப்பில் ரோஹித்தின் ஒருநாள் போட்டி எதிர்காலம் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா வெளிப்படையாகவே ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாடுவார் என்று கூறி இருந்தார். விரைவில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.