📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 12, 2026 09:01 PM

அமைச்சர் சொன்ன வார்த்தை ... கோபமான சூர்யா !

அமைச்சர் சொன்ன வார்த்தை ... கோபமான சூர்யா !

அமைச்சர் சொன்ன வார்த்தை ... கோபமான சூர்யா !

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருவதற்கு பின்னால் ஒரு அமைச்சரின் கேள்வி முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சூர்யா, தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

நடிகர் சிவகுமாரின் மகன் என்பதால் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பத்திலேயே தனக்கு இருந்ததாக சூர்யா தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக ஒரு அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

நண்பரின் குடும்ப நிகழ்ச்சிக்காக திருமண அழைப்பிதழ் வழங்கச் சென்றபோது, அங்கு இருந்த அமைச்சரிடம் தனது நண்பர் தன்னை சிவகுமாரின் மூத்த மகன் என அறிமுகப்படுத்தியதாக சூர்யா கூறியுள்ளார். அப்போது சினிமா குறித்து அந்த அமைச்சர் அவரிடம் பேசியதாகவும், தனது தந்தையைப் போலவே தானும் நடிக்கப் போகிறாரா என அவர் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் அந்த கேள்வி சூர்யாவுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தனது தந்தையின் நடிப்பு, உடல்மொழி, குரல் உள்ளிட்ட எந்த அம்சங்களும் தன்னுடைய நடிப்பில் அப்படியே பிரதிபலிக்கக் கூடாது என அவர் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு சிவகுமார் நடித்த திரைப்படங்களைப் பார்ப்பதையே சில காலம் தவிர்த்ததாகவும், தனக்கென வேறுபட்ட நடிப்பு பாணியை உருவாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.

சினிமாவுக்குள் வந்தது குறித்தும் சூர்யா மனம் திறந்துள்ளார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவை நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிட்டு எடுத்தது இல்லை என்றும், கேமரா முன் நிற்கப் போகிறோம் என்பது கூட படப்பிடிப்புக்கு சில நாட்களுக்கு முன்புதான் தனக்குத் தெரிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

குடும்பத்தின் அப்போதைய நிதி சூழ்நிலையே சினிமாவைத் தொழிலாக தேர்வு செய்ய முக்கிய காரணமாக இருந்ததாக சூர்யா தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் பணத்தேவைக்காக திரைத்துறைக்கு வந்திருந்தாலும், ரசிகர்கள் வழங்கிய அன்பும் ஆதரவும் சினிமாவை தொடர்ந்து செய்வதற்கான நம்பிக்கையை தனக்கு அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் பார்வையாளர்களை தொடர்ந்து சிரிக்க வைக்கும் வகையில் அமைந்திருப்பதாக சூர்யா கூறியுள்ளார்.

சூர்யா பகிர்ந்த இந்த சம்பவத்தில் அந்த அமைச்சர் யார் என்பது குறித்து தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது. தனது தந்தையின் அடையாளத்தை தாண்டி தனக்கென ஒரு பாதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு உருவானது என்பதை சூர்யா வெளிப்படையாக பகிர்ந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.