📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 22, 2026 07:04 PM

“அப்பா, அம்மா அப்செட் ஆகிட்டாங்க”

“அப்பா, அம்மா அப்செட் ஆகிட்டாங்க”

“அப்பா, அம்மா அப்செட் ஆகிட்டாங்க” - அதிர்ச்சி தந்த ஜேசன் சஞ்சய்!

செய்தியாளர் - கார்த்திகேயன்

முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் சிக்மா. சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழியில் ஒரே சமயத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷன் அட்வெஞ்சர் பானியில் தயாராகியுள்ள இந்த திரைப்படத்தின் புரமோஷன் பணிகளுக்காக, பல்வேறு ஊடகங்களுக்கு ஜேசன் சஞ்சய் பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறிய தகவல் ஒன்று, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, “வெளிநாட்டில் இருந்து நண்பன் ஒருவன் வந்திருக்கிறான். நாங்கள் நண்பர்கள் அனைவரும் அவனது வீட்டில் தங்கப்போகிறோம். சென்னையில் தான் இருப்பேன். ஆனால் என்னை தேடாதீர்கள் என்று எனது அம்மாவிடம் கூறிவிட்டு, கேரளா எல்லையில் உள்ள ஒரு ஊருக்கு சென்றுவிட்டோம்.

நாங்கள் தங்கிய தனியார் இடத்திற்கு மிக அருகில் புலிகள் சரணாலயம் ஒன்று இருந்தது. அந்த சமயத்தில், எனக்கு என்னுடைய அம்மா செல்போன் அழைப்பு விடுத்திருந்தார்கள். நான் எடுக்காததால், அவருக்கு மலையாளத்தில் பிசி டோன் கேட்டுள்ளது. அதன்பிறகு, நான் கேரளாவுக்கு சென்றுவிட்டது, அம்மாவுக்கு தெரிந்துவிட்டது. அதன்பிறகு பயந்து போன நான், சென்னைக்கு வரும்வரை, செல்போனை தொடக்கூட இல்லை” என்று தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார்.

தொடர்ந்து, “அந்த பயணத்தின்போது ஒருநாள் நாங்கள் சிறுத்தையை பார்த்தோம். 100 மீட்டர் தூரத்தில் தான் சிறுத்தை இருந்தது. அதன்பிறகு, அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டோம்” என்று கூறிய சஞ்சய், “நான் இவ்வாறு ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது, எனது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஆனால், அப்படி யோசித்தால், இயற்கை அழகை ரசிக்கவே முடியாது. எனக்கு இதில் வருத்தம் இல்லை” என்று கூறினார்.

இதையடுத்து, உங்களது முதல் சம்பளம் என்ன என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சஞ்சய், “நான் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும்போது கால்டன் சினிமாஸ் என்ற ஒரு தியேட்டரில், கேசியராக பணியாற்றினேன். அந்த தியேட்டரில் மிகவும் பழைய படங்களை மட்டும் தான் திரையிடுவார்கள். யாரும் திரையரங்கிற்கு வரவில்லை என்றால், நான் மட்டும் அமர்ந்து படத்தை பார்க்க தொடங்கிவிடுவேன். அங்கு பணியாற்றியது எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்தார்.