அதிலிருந்து மீண்டு வந்து இப்போ நல்லா இருக்கேன்.. அனுபமா பரமேஸ்வரன் தடாலடி ரியாக்ஷன்!
சென்னை: திரையுலகில் நடிகர், நடிகைகள் காதலிப்பதும், பிரிவதும் புதிதல்ல. ஆனால் சில ஜோடிகள் குறித்து வெளியாகும் தகவல்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திவிடும். அப்படித்தான் தற்போது நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் நடிகர் த்ருவ் விக்ரம் குறித்து வெளியாகியுள்ள பிரேக்கப் தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற பேச்சு ஓடிய நிலையில், தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரனை, இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் தெலுங்கில் 'அ ஆ' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு 'சதமானம் பவதி', 'கார்த்திகேயா 2', 'டில்லு ஸ்கொயர்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது ஷர்வானந்துடன் 'போகி' மற்றும் 'கிரேஸி கல்யாணம்' படங்களில் நடித்து வருகிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'பைசன்' படத்தில் த்ருவ் விக்ரமுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு வீக் எண்ட் டிரிப்கள், பார்ட்டிகள், விருது விழாக்கள் என பல இடங்களில் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டதால் காதல் வதந்தி மேலும் வலுத்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற தகவலும் பரவியது.
ஆனால், சமீபத்தில் அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ருவ் விக்ரமை அன்ஃபாலோ செய்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவ ஆரம்பித்தன.
இதற்கிடையே, அனுபமா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "இனிமேல் என் மனதுக்கு சரி என்று தோன்றுவதை மட்டுமே செய்வேன். அதற்காக யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு எந்த பயமும் இல்லை" என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவு த்ருவ் விக்ரமை மறைமுகமாக குறிப்பிட்டுதான் பதிவிடப்பட்டதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக, த்ருவ் விக்ரமின் கட்டுப்பாடான அணுகுமுறையால் ஏற்பட்ட மனக்கசப்பே இந்த பிரிவுக்கு காரணம் என்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. இருப்பினும், இதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 'கிரேஸி கல்யாணம்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 1ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. தருண் பாஸ்கர், அகில் ராஜ், வி.கே. நரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை பத்ரப்பா காஜுலா இயக்கியுள்ளார். பூசம் ஜெகன்மோகன் ரெட்டி தயாரித்துள்ள இப்படத்தின் டீசரை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி வெளியிட்டார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்கள் அனுபமாவிடம், இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் பிரேக்கப் வதந்தி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "இப்போது எல்லாம் நன்றாக இருக்கிறது. கடந்த ஆண்டு என் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலமாக இருந்தது. ஆனால் அதிலிருந்து மீண்டு தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறினார்.
அனுபமா தனது பதிலில் த்ருவ் விக்ரமின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை. இருந்தாலும், அவரது இந்த பதிலுக்குப் பிறகு பிரேக்கப் வதந்தி உண்மையாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை த்ருவ் விக்ரம் தரப்பில் இருந்து இந்த விவகாரம் குறித்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை.