📅 Saturday, 06 June 2026 IST | வைகாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 06, 2026 04:00 PM

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் தவெகவில் ஐக்கியம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் தவெகவில் ஐக்கியம்!

உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. 47 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட் இழந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அக்கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

இது, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீதான நம்பிக்கையை பெருமளவில் சிதைத்து வருவதாக அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது.

கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும் அதிமுக வெற்றி பெறாத நிலையில், தனித்துப் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இதனால், தேர்தலை அடுத்து அதிமுகவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவர்கள் தவெக அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். அதோடு, அதிமுகவை சேர்ந்த 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்சி சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று தவெகவில் இணைந்தனர்.

தங்கள் ஆதரவாளர்களோடு சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு வந்த அவர்கள், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் முன்னிலையில் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர்.

மேலும், ராமநாதபுரம் மாவட்ட அமமுகவினர், மாவட்ட அளவில் கட்சியை கலைத்துவிட்டு தற்போது தவெகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.