"அடுத்த முதல்வர் திருமாவளவன்தான் என ஆதவ் பிரசாரம் மேற்கொள்ள சொன்னார், ஆனால்..!'
"அடுத்த முதல்வர் திருமாவளவன்தான் என ஆதவ் பிரசாரம் மேற்கொள்ள சொன்னார், ஆனால்..!' - திருமா சொல்வதென்ன?
"திமுக தலைமையிலான மதச்சார்பற்றக் கூட்டணி உடையக் கூடாது என்று விசிக உறுதியாக இருந்தது"- திருமாவளவன்
விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் திமுகவுடான கூட்டணி குறித்து பேசியிருக்கிறார்.
" தொடர்ச்சியாக திமுகவுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே திமுகவுடனானக் கூட்டணியில் இருந்து சிலர் விசிகவை அகற்றப் பார்த்தனர்.
இதனை நான் எல்லோரிடமும் பகிரவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணனிடம் அவ்வப்போது சந்தித்த நெருக்கடிகளைப் பகிர்ந்துகொண்டேன். இந்தக் கூட்டணியை உடைப்பதற்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாகவும் வெளிப்படையாகவும் அவரிடம் கூறினேன்.
என்னை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கு விசிகவை டார்கெட் செய்து பிரசாரம் செய்தார்கள்.
ஆனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்றக் கூட்டணி உடையக் கூடாது என்று விசிக உறுதியாக இருந்தது. இதெல்லாம் இன்று நம்மை விமர்சிக்கின்ற கும்பலுக்கு தெரியாது. நம்மோடு இருந்த ஆதவ் அர்ஜுனா அவர்கள் எப்படியெல்லாம் விசிகவை வளர்த்தெடுக்கப்போகிறோம் என்று நம் செயற்குழு கூட்டத்தில் பேசியிருந்தது நம் தோழர்களுக்கு தெரியும்.
அப்போது அவருடைய கோரிக்கை என்னவாக இருந்தது என்றால் அடுத்த முதலமைச்சர் திருமாவளவன் தான் என்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதீதமானது.
ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் அல்ல பிற ஜனநாயக சக்திகளும் உங்களை நம்புகிறார்கள். எனவே நீங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்து முதலமைச்சர் நீங்கள் தான் என்ற வேலைப்பாடுகளை மேற்கொள்வோம் என்று எங்கள் செயற்குழு கூட்டத்தில் வெளிப்படையாக அவர் பேசினார்.
நான் சொன்னேன் முதலமைச்சராவது ஒருபுறம் இருக்கட்டும் ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜக தமிழ்நாட்டில் வேரூன்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் திமுக தலைமையிலானக் கட்டுக்கோப்பான கூட்டணியை இந்தக் காரணத்திற்காக உடைத்துவிட்டோம் என்ற பெயர் வந்துவிடக்கூடாது. அதனால் இதற்கு உடன்பட மாட்டேன் என்று ஆதவ் அர்ஜுனாவிடம் கூறினேன்" என்று பேசியிருக்கிறார்.