அயர்லாந்தில் வன்முறை.. திட்டமிட்டப்படி இந்திய தொடர் நடக்குமா? கிரிக்கெட் வாரியம் முக்கிய அறிவிப்பு
அயர்லாந்தில் வன்முறை.. திட்டமிட்டப்படி இந்திய தொடர் நடக்குமா? கிரிக்கெட் வாரியம் முக்கிய அறிவிப்பு
பெல்ஃபாஸ்ட்: இந்திய அணி அயர்லாந்தில் இரண்டு டி20ஐ போட்டிகளில் விளையாடுவதற்காகச் செல்லவிருக்கும் நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள கலவரங்கள் குறித்து கவலை எழுந்துள்ளது. அயர்லாந்தில் நடந்த கத்தி குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, பெரும் போராட்டங்களும் கலவரங்களும் வெடித்துள்ளன.
30 வயதுடைய சூடான் நபர் ருவர், உள்ளூர் நபர் ஒருவரை கத்தியால் குத்திக் காயப்படுத்தியதை அடுத்து போராட்டங்கள் தொடங்கின. குடியேற்ற எதிர்ப்புச் சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தி அமைதியான போராட்டங்கள் நடந்தாலும், சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர்.
பெல்ஃபாஸ்ட் பகுதியில் சுமார் 300 போராட்டக்காரர்கள் வாகனங்கள், லாரிகள் மற்றும் கடைகளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். வரும் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்திய அணி விளையாடவுள்ள இரண்டு டி20ஐ போட்டிகளுக்கும் பெல்ஃபாஸ்ட் நகரமே மையமாக உள்ளது. இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 12 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் போட்டிகள் குறித்து அடுத்த இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று கிரிக்கெட் அயர்லாந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய அணிக்கு எதிரான தொடர் கிரிக்கெட் வாரியத்தின் நிதி ரீதியாக முக்கியமானது என்பதால், தற்போதைய சூழல் தொடரைப் பாதிக்குமா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
"தற்போதைய சமூகக் குழப்பங்கள் நிலவும் பகுதிகளில் நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வரவிருக்கும் போட்டிகள் குறித்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் முடிவெடுக்கப்படும்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு எங்கள் முதன்மையான முன்னுரிமையாகும். தகுந்த தகவல்கள் கிடைக்கும்போது கூடுதல் அப்டேட்கள் வழங்கப்படும்," என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் இந்த நிலவரம் குறித்து சில கவலைகள் எழுந்துள்ளன. இவர்கள் இந்த போராட்டங்களின் நேரடி இலக்கு இல்லை என்றாலும், கடந்த காலங்களில் இனவெறித் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து, இந்திய அணி ஜூலை 1 முதல் இங்கிலாந்தில் ஐந்து டி20ஐ மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணி இதுவரை அயர்லாந்தில் மூன்று முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த மூன்று தொடர்களிலும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.