BB Tamil 10: "டிவிக்கு வந்த இத்தன வருஷத்துல இப்படி மோசமான அனுபவத்தைச் சந்திச்சதே இல்ல"
BB Tamil 10: "டிவிக்கு வந்த இத்தன வருஷத்துல இப்படி மோசமான அனுபவத்தைச் சந்திச்சதே இல்ல"- ஷப்னம் அம்மா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்டேஜ் எவிக்ஷன் மூலம் ஷோ தொடங்கும் முன்பே எலிமினேட் ஆன நடிகை ஷப்னத்தின் அம்மா தனது குமுறலை வெளிப்படுத்திய செய்தி.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது.
பத்தாவது ஆண்டு ஸ்பெஷல் என்பதால் எந்தச் சீசனிலும் இல்லாத புதுமையாக இந்தச் சீசனில் 14 போட்டியாளர்கள், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பே எவிக்ட் ஆகி அறிமுக மேடையிலிருந்தபடியே வெளியேறினர். ‘இந்த சீசன் இப்படிதான்’ என அதற்கு விளக்கம் தந்தார் விசே.
சின்னத்திரை நடிகை ஷப்னம்தான் அப்படி வெளியேறிய முதல் ஆள். பிக்பாஸ் வாய்ப்பு வந்த போது இவரது வீட்டில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லையாம். ஆனால் அடம் பிடித்து இந்தச் சீசனில் கலந்து கொள்ள அனுமதி வாங்கினாராம்.
அப்படிச் சென்றவரை முதல் நாளே ஸ்டேஜ் எவிக்ஷன் மூலம் எலிமினேட் செய்ததில் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறார் என்கிறார்கள்.
ஷப்னத்தின் அம்மாவிடம் பேசினோம்.
‘’நிகழ்ச்சியில கலந்துக்கப் போறோம்னு பத்து நாளா பர்ச்சேஸ் அது இதுன்னு அவ்வளவு அலைஞ்சு அதற்குத் தயாரானா. மனசளவுலயும் ஷோவுக்குள் போனா எப்படி விளையாடறது சக போட்டியாளர்கள் வம்பிழுத்தா என்ன செய்யறதுன்னு பல யோசனைகளே ஓடிட்டிருந்தது. உற்சாகமா போன பொண்ணை இந்த மாதிரி ஒரு எவிக்ஷன்னு சொல்லி முதல் நாளே அனுப்பினது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.
புது முயற்சின்னு இது என்னங்க ஐடியா? அந்த வீட்டுக்குள் அனுப்பின பிறகுதான் முதல் வாரமே எவிக்ஷன் ஆரம்பிச்சுடுதே. சரியா விளையாடலைன்னா அனுப்பிட்டு போங்க. ஆனா நிகழ்ச்சிக்குப் போறதுக்கு முன்னாடியே என்னங்க அது எவிக்ஷன்?
அங்க இருந்த ஆடியன்ஸ் யார்? அவங்க அந்த அரை மணி நேர ஒரு மணி நேரத்துல இவங்க பெர்ஃபார்மன்ஸை எப்படி தீர்மானிச்சாங்க? இந்த மாதிரி நிறைய கேள்விகள் இருக்கு. ஆனா நான் எதையும் டீடெய்லா பேச விரும்பல.
என் மக ரொம்ப உடைஞ்சு போயிட்டா. எங்க குடும்பத்துல எல்லாருமே வருத்தத்துல தான் இருக்கோம். அன்னைக்கு அந்தத் தொடக்க நிகழ்ச்சி ஒளிபரப்பானதைக் கூட நாங்க டிவியில பார்க்கல. பார்த்தா அழுகையைக் கட்டுப்படுத்த முடியாதுன்னு டிவி வைக்கலை.
நடந்ததை அப்படியே மறந்துட்டு வேலையில கவனம் செலுத்துனு சொல்லியிருக்கோம். டிவியில ரொம்ப வருஷமா நடிச்சிட்டிருக்கா. எல்லாரும் இவளது குறும்புத்தனங்களை ரசிப்பாங்க. ஆனா சின்னத்திரையில் இப்படியொரு மோசமான அனுபவம் இதுதான் முதல் தடவை’’ எனக் குமுறினார் அவர்.