சாம்சன் கெத்து பேட்டி.. "எனக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டாம்.. சஞ்சுவுக்கு என்ன வேணுமோ.."
சாம்சன் கெத்து பேட்டி.. "எனக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டாம்.. சஞ்சுவுக்கு என்ன வேணுமோ.."
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், "நான் ஏற்கனவே பல சாதனைகளைச் செய்துவிட்டேன்; இனி நான் எப்படி விளையாட வேண்டும் என்று யாரும் எனக்கு அறிவுரை கூறத் தேவையில்லை" என்று கெத்தாகப் பேட்டியளித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் அதன் பின் டி20 அணியில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் சில வாரங்கள் முன்பு அவர் ஜியோஹாட்ஸ்டார் தளத்திற்கு அளித்த பேட்டி தற்போது பகுதி பகுதியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில் தனது எதிர்காலத் திட்டம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
சஞ்சு சாம்சன் கூறுகையில், "நமது நாட்டில் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே எப்போதும் ஒரு பந்தயம் இருந்து கொண்டே இருக்கிறது. இதிலிருந்து விலகி ஆட்டத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று 2026 உலகக்கோப்பைக்கு முன்பே நான் முடிவெடுத்துவிட்டேன். இனி எனது சொந்த விருப்பப்படியே விளையாடப் போகிறேன்" என்றார்.
அணி நிர்வாகத்தின் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், "கடவுளின் அருளால் நான் ஏற்கனவே பலவற்றைச் சாதித்துவிட்டேன். எனக்கு தற்போது 31 வயதாகிறது. இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே விளையாட முடியும். எனவே நான் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று இனி யாரும் எனக்குச் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. சஞ்சுவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சஞ்சு தான் முடிவெடுப்பார். சக வீரர்களுக்கு நல்ல நண்பனாக இருந்து ஆதரவு அளிப்பேன், ஆனால் எனது பாணியில் மட்டுமே விளையாடுவேன்" என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பைக்கு முன்பாகத் தனது தொடக்க வீரர் இடத்தை அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷனிடம் இழந்த சஞ்சு சாம்சன், பின்னர் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்பட்டார்.
அதன்பின் தொடர்ச்சியாக 3 அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தி இந்தியா உலகக்கோப்பையை வெல்ல உதவினார். தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், "2024 உலகக்கோப்பைக்கு பிறகு நான் 2026 உலகக்கோப்பையில் விளையாடுவேன் என்றே எதிர்பார்க்கவில்லை. 15 பேர் கொண்ட அணியில் கூட நான் இல்லை. அப்படி இருக்கையில் 2028 உலகக்கோப்பை குறித்து நான் ஏன் இப்போது கவலைப்பட வேண்டும்?" என்று சஞ்சு சாம்சன் தனது பேட்டியில் கூறி இருக்கிறார்.