📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 23, 2026 11:02 AM

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை | உதவி எண் அறிவிப்பு!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை | உதவி எண் அறிவிப்பு!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை | உதவி எண் அறிவிப்பு!

பெண்களின் அவசரகால உதவிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை எந்நேரமும் தொடர்பு கொள்வதற்காக பிரத்யேக 1091 என்ற கட்டணமில்லா உதவி எண்ணும் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கம் உள்ளிட்ட 3 கோப்புகளில் கையெழுத்திட்டிருந்தார். தொடர்ந்து, இதுகுறித்த அரசாணைகளும் வெளியிடப்பட்டன. முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில், ஐஜி தலைமையில் 1 எஸ்.பி, 2 டி.எஸ்.பி மற்றும் 4 காவல் ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள் எனவும் குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்காணித்து பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு என பிரத்யேகமாக சீருடைகளும் வழங்கப்பட்டது. இந்தச் சூழலில்தான், இந்த திட்டத்தின் தலைமை அதிகாரியாக ஐ.ஜி கே. பவானிஸ்வரி நியமிக்கப்பட்டார்.

பின்னர், இத்திட்டம் ஜூன் 9ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது, சிங்கப்பெண் அதிரடிப்படைக்கான இலச்சினையை முதல்வர் விஜய் வெளியிட, அதனை ஐஜி பவானிஸ்வரி பெற்றுக்கொண்டார். அதனையடுத்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்பான ஏஐ காணொளி ஒளிபரப்பப்பட்டது. பின்னர் இந்நிகழ்வில் பேசிய முதல்வர், “சிங்கப்பெண் சிறப்பு படைக்காக 354 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட உள்ளது. திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, புதிதாக 2,500 பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக அதி நவீன வாகனங்களும், உபகரணங்களும் வழங்கப்படும். பெண்களும் குழந்தைகளும் மரியாதையுடன் வாழ்வதுதான் ஓர் அரசின் முழுமையான வெற்றி. இந்தியாவிலேயே முதல்முறையாக ட்ரோன்கள் மூலம் பெண்கள் பாதுகாப்பு கண்காணிக்கப்படும்” என்றார்.

இந்த புதிய 1091 உதவி எண் திட்டம், ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் 112 அவசரகால எண்ணுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 1091 என்ற எண்ணை அழைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே, பாதிக்கப்பட்ட இடத்திற்கு மிக அருகில் இருக்கும் சிங்கப்பெண் அதிரடிப்படையின் ரோந்து வாகனங்கள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாகச் சென்றடையும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.