சிங்கப்பூர்
சிங்கப்பூருக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 60 ஆண்டுகால அரசதந்திர உறவைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூர் தலைவர்கள் பாகிஸ்தான் தலைவர்களுக்கு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் முகம்மது ஷெபாஸ் ஷெரீப்புக்கு எழுதிய கடிதத்தில், கடந்த அறுபது ஆண்டுகளாகப் பரஸ்பர மாரியாதையாலும் புரிந்துணர்வாலும் உருவான சுமுகமான நட்புறவை இரு நாடுகளும் பகிர்ந்துகொண்டுள்ளதாக பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
1965ல் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு, அதை அங்கீகரித்த முதல் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
“நாம் இருதரப்பு, பலதரப்புத் தளங்களில் இணைந்துப் பணியாற்றியுள்ளோம். வர்த்தக வசதி, மின்னிலக்கப் பொருளாதாரம், மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள், திறன் மேம்பாடு ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன,” என்று பிரதமர் வோங் கூறினார்.
இரு நாடுகளுக்கு இடையிலான பங்காளித்துவத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய, திரு ஷெரீப்புடனும் அவரது அரசாங்கத்துடனும் இணைந்துப் பணியாற்ற எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகம்மது இஷாக் தாருக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் செய்தி அனுப்பியுள்ளார்.
இரு நாட்டு மக்களுக்கு இடையிலான அணுக்கமான தொடர்பு அம்சங்களால் பிணைக்கப்பட்ட நீண்டகால நட்புறவை இந்த 60ஆம் ஆண்டு மைல்கல் கோடிகாட்டுவதாக அவர் தெரிவித்தார்.