சரியான நேரத்தில் செஞ்சுரி அடித்து.. இந்திய டெஸ்ட் பிளேயிங் 11இல் இடம் பிடித்த தேவ்தத் படிக்கல்
சரியான நேரத்தில் செஞ்சுரி அடித்து.. இந்திய டெஸ்ட் பிளேயிங் 11இல் இடம் பிடித்த தேவ்தத் படிக்கல்
கொழும்பு: கொழும்பில் நடைபெற்று வரும் 3 நாள் பயிற்சிப் போட்டியில், இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் 3-வது வரிசையில் களமிறங்கி அபார சதமடித்து அசத்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி இந்த பயிற்சிப் போட்டியில் பங்கேற்று இருந்தது.
இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான இந்தப் போட்டியின் 2-வது நாளில், மிகுந்த பொறுப்புடன் விளையாடிய இடதுகை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல், 121 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்தார். ரமேஷ் மெண்டிஸ் வீசிய 40-வது ஓவரின் 4-வது பந்தில் பவுண்டரி அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார். பின்னர் மற்ற வீரர்களுக்கு பேட்டிங் வாய்ப்பளிக்கும் வகையில் அவர் 'ரிட்டயர் அவுட்' ஆகி மைதானத்தை விட்டு வெளியேறினார்.
முன்னதாக, 3-வது வரிசை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரிலிருந்து முழுமையாக விலகினார். அதே போல கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக இந்த பயிற்சிப் போட்டியில் விளையாடவில்லை. அவரால் டெஸ்ட் தொடரில் பேட்டிங் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது.
இந்த நிலையில், தேவ்தத் படிக்கல் சரியான நேரத்தில் சதம் அடித்து பிளேயிங் லெவனில் தனது இடத்தை உறுதி செய்து இருக்கிறார். இதன் மூலம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கல்லே மைதானத்தில் தொடங்கும் முதலாவது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் 11-ல் தேவ்தத் படிக்கலின் இடம் உறுதியாகி உள்ளது.
கடந்த 2024 மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான தேவ்தத் படிக்கல், அதன்பின் பல தொடர்களில் மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டார். தற்போது சாய் சுதர்சனின் விலகலால் கிடைத்த வாய்ப்பை, தேவ்தத் படிக்கல் சரியாக பயன்படுத்திக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.