📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka July 17, 2026 11:33 PM

சுப்மன் கில்லுடன் U19 உலககோப்பையில் விளையாடிய இந்திய வீரர் மேட்ச் ஃபிக்சிங் வழக்கில் கைது

சுப்மன் கில்லுடன் U19 உலககோப்பையில் விளையாடிய இந்திய வீரர் மேட்ச் ஃபிக்சிங் வழக்கில் கைது

சுப்மன் கில்லுடன் U19 உலககோப்பையில் விளையாடிய இந்திய வீரர் மேட்ச் ஃபிக்சிங் வழக்கில் கைது

கொழும்பு: லங்கா பிரீமியர் லீக் 2026 தொடரில் மேட்ச் பிக்சிங் புகாரில், அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மன்ஜோத் கல்ரா இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். மன்ஜோத் கல்ரா எல்பிஎல் தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாணம் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளராக அண்மையில் சேர்ந்திருந்தார்.

இலங்கை விளையாட்டுகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்கான சிறப்புப் புலனாய்வுப் பிரிவு எல்பிஎல் 2026 தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அவரைக் கைது செய்தது. கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து மன்ஜோத் கல்ரா கைது செய்யப்பட்டதை அந்நாட்டு காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

போட்டியின் முடிவை மாற்றுவதற்கு ஒரு வீரருக்கு ரூ.9.5 மில்லியன் பணம் கொடுக்க மன்ஜோத் கல்ரா முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேட்ச் பிக்சிங் அணுகுமுறை குறித்து சம்பந்தப்பட்ட வீரர் முன்கூட்டியே புகார் அளித்ததைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்ரா விரைவில் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

எல்பிஎல் 2026 தொடங்குவதற்கு முன்னதாகவே யாழ்ப்பாணம் கிங்ஸ் அணியின் உரிமையாளர் குழுவில் மன்ஜோத் கல்ரா இணைந்திருந்தார். இந்த கைது நடவடிக்கை அரங்கேறிய நிலையிலும், திட்டமிட்டபடி தொடர் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், இந்த விசாரணைக்கு சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

மன்ஜோத் கல்ரா, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அந்த அணியில் பிரித்வி ஷா, ஷுப்மன் கில், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிவம் மாவி போன்ற முன்னணி வீரர்களுடன் இணைந்து விளையாடினார். அந்த தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 84 சராசரியுடன் 252 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், 217 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 38.5 ஓவர்களில் எளிதாக எட்ட கல்ராவின் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். எனினும், வயது மோசடி புகாரில் சிக்கியதால் அவரால் கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் போனது. அவர் தனது தொழில்முறை வாழ்க்கையில் ஒரே ஒரு லிஸ்ட் 'ஏ' போட்டியிலும், இரண்டு டி20 போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ளார்.