ஒரு வாரத்தில் 80 ஓவர்கள்.. ஓய்வால் உடல் மந்தமாகிவிட்டது.. இப்போது சுறுசுறுப்பாகி விட்டேன்
ஒரு வாரத்தில் 80 ஓவர்கள்.. ஓய்வால் உடல் மந்தமாகிவிட்டது.. இப்போது சுறுசுறுப்பாகி விட்டேன்- சிராஜ்
சென்னை: இரண்டு மாத கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விளையாட வந்ததுதான், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது வேகம் மற்றும் பந்துவீச்சை எபாதித்தது என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.சேப்பாக்கத்தில் கிழக்கு மண்டல அணிக்கு எதிராக நடைபெற்ற துலீப் கோப்பை இறுதிப் போட்டியில், தெற்கு மண்டல அணிக்காக சிராஜ் 41 ஓவர்களை வீசினார்.
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது, சிராஜின் பந்துவீச்சு வேகம் கணிசமாகக் குறைந்திருந்தது. வழக்கமாக 140 கி.மீ வேகப்பிரிவில் வீசும் அவர், 120 கி.மீ முதல் 130 கிமீ வேகத்தில் தான் பந்துவீசினார். நான்கு இன்னிங்ஸ்களில் 44 ஓவர்கள் வீசிய போதிலும், இலங்கை பேட்டர்களுக்கு அவரால் தொடர்ந்து நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களே பெரும்பாலான ஓவர்களை வீச வேண்டியிருந்தது.
இது குறித்து பேசிய சிராஜ், "இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு நேரடியாக ஒரு போட்டியில் விளையாடும்போது, எனது பந்துவீச்சு ரிதம் சரியாக அமையவில்லை. நான் முழுமையாக பந்துவீச்சு ரிதத்தை சார்ந்திருக்கும் ஒரு பந்துவீச்சாளர். எனது ஓட்டமும் பந்துவீசும் முறையும் சரியாகப் பொருந்தவில்லை என்றால், என்னால் முழு வேகத்தில் பந்துவீச முடியாது" என்று தெரிவித்தார்.
"இலங்கை தொடரில் இதுதான் எனது போராட்டமாக இருந்தது. எனது ரன் அப் சீரற்று இருந்தது. சில அடிகள் மிகக் குறுகியதாகவும், சில அடிகள் மிக நீளமாகவும் இருந்தன. இது எனது பந்துவீச்சு ஓட்டத்தை பாதித்து, வேகத்தைக் குறைத்துவிட்டது," என்று கூறினார்.
"இங்கு அனைத்தும் சரியாக அமைந்தது, வேகமும் இயல்பாகவே வந்தது. ஆம், இது மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் இலங்கையிலிருந்து நேரடியாக இங்கு வந்தோம். அங்கு இரண்டாவது டெஸ்டில் மூன்றரை நாட்கள் பீல்டிங் செய்தோம். அதன்பிறகு ஒரே வாரத்தில், சென்னையின் கடுமையான வெப்பத்தில் இங்கு விளையாட வேண்டியிருந்தது" என்றார்.
"ஆனால் என்னைப்பொறுத்தவரை இது ஆட்டத்தின் மீதான ஆர்வத்தைப் பொறுத்தது. நாட்டுக்காக விளையாடும்போது உங்களால் எந்த சாக்குகளையும் சொல்ல முடியாது. உங்கள் அணிக்காகவும் நாட்டுக்காகவும் உங்களது முழு உழைப்பையும் கொடுக்க வேண்டும், இன்று விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும், இந்த கடின உழைப்புக்கான பலன் சர்வதேச அளவில் விளையாடும் போது நிச்சயம் கிடைக்கும்" என்றார்.
"இந்தப் போட்டிக்குள் நுழையும் போது, பந்துவீச்சின் சீரான ஓட்டத்தைக் கண்டறிவதே எனது முதன்மை இலக்காக இருந்தது. இந்த ஆட்டத்தில் விளையாடியது எனக்குப் பெருமளவில் உதவியது. இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு, உங்கள் உடல் முன்பு போல வேகமாக செயல்படாது. அனைத்தும் சற்று மெதுவாகவே இருக்கும். இந்த போட்டியில் விளையாடியது எனது உடலை மீண்டும் சுறுசுறுப்பாக்கி, பந்துவீச்சு ரிதத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது," என்று அவர் கூறினார்.
"எனது உடல் அப்படித் தான் செயல்படுகிறது. நீண்ட இடைவெளிகளை எனது உடல் ஏற்பதில்லை. சிறிய ஓய்வு பரவாயில்லை, ஆனால் எனது 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் நான் இரண்டு முழு மாதங்கள் ஓய்வு எடுத்ததே இல்லை. எனவே, நான் எவ்வளவு ஓவர்கள் வீசுகிறேனோ, அவ்வளவுக்குச் சிறப்பாக விளையாடுவேன்."
"நான் நீண்ட ஸ்பெல்களை வீசாவிட்டால், எனது பழைய பந்துவீச்சு திரும்பாது. இந்த இடைவெளி எனது உடலை சற்று மந்தமாக்கியது. நான் 10 மற்றும் 11 ஓவர்கள் கொண்ட ஸ்பெல்களை வீசினேன், இதுதான் எனக்கு பழைய பந்துவீச்சு ரீதத்தை மீட்டுக் கொடுத்தது," என்று குறிப்பிட்டார்.