Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஏப்ரல் 1ம் தேதியான இன்று சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது வியாபாரிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வணிக சிலிண்டரின் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் பெறுகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதம் வணிக சிலிண்டர் விலை அதன் முந்தைய விலையில் இருந்து ரூ.203 உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.2,043ல் இருந்து ரூ.2, 246 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம் வீட்டு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அவை ரூ.928.50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த பிரச்னை நடந்து வரும் நிலையில் ஈரானில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி பாதை அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிக சிலிண்டர் விநியோகத்தில் மிகப்பெரிய பாதிப்பு உண்டாகியுள்ளது.
இதனால் விடுதிகள், ஹோட்டல்கள் போன்றவை மூடப்பட்டது. பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். சிலிண்டர் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல வணிக இடங்களில் மின்சார அடுப்பு, விறகு அடுப்புகள் பயன்படுத்தும் சூழலுக்கு சென்று விட்டனர். மின்சார அடுப்பு பயன்படுத்தும் வணிகர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.2 சலுகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போர் எரிசக்தி விநியோகச் சங்கிலிகளைப் பாதித்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், வணிக சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல வணிக சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிலிண்டர் விலை உயர்வு பொதுமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.