எகிறும் பெட்ரோல், டீசல் விலை தண்ணீரில் ஓடும் கார்
எகிறும் பெட்ரோல், டீசல் விலை; தண்ணீரில் ஓடும் கார்- சிசிடி தொழில்நுட்பம் தெரியுமா?
எகிறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குத் தீர்வாக தண்ணீரால் ஓடும் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் பின்னணியில் சிசிடி என்னும் தொழில்நுட்பம் செயல்படும் நிலையில், அதன் முழு விவரத்தைக் காணலாம்.
தற்போதைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றின் விலை தொடர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 108 ரூபாயைத் தாண்டி உள்ளது. இதனால், அன்றாடம் வாகனங்களைப் பயன்படுத்தும் சாமானிய மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
எரிபொருள் விலை உயர்வு காரணமாகப் போக்குவரத்துச் செலவுகள் மட்டுமல்லாமல், மளிகை, பிற பொருட்களின் விலை அதிகரித்து, மக்களின் மாதாந்திர பட்ஜெட் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் எரிபொருள் நெருக்கடிக்கு மாற்றுத் தீர்வு காணும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், வாகன ஓட்டிகளுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தியாக, தண்ணீரைக் கொண்டு கார்களை இயக்கும் ஒரு புதிய மற்றும் ஆச்சரியமளிக்கும் தொழில்நுட்பம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
புதிய தொழில்நுட்பம்
சிசிடி (CCT- Controlled Cavitation Technology) தொழில்நுட்பம் என அழைக்கப்படும் இந்த அதிநவீன முறையின் மூலம், விலையுயர்ந்த பெட்ரோல் அல்லது டீசலுடன், சாதாரணமாகக் கிடைக்கும் தண்ணீரைச் சேர்த்து வாகனங்களை இயக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். மொனாகாவைச் சேர்ந்த FOWE எக்கோ சொலூஷன்ஸ் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த சிசிடி தொழில்நுட்பத்தின்படி, கார்களில் ஒரு பிரத்யேகமான இயந்திர அமைப்பு பொருத்தப்படுகிறது. இந்தக் கருவியானது, தண்ணீர் குமிழ்களைச் சிறப்பான முறையில் வேதியியல் வினைக்கு உட்படுத்தும் பணியைச் செய்கிறது. பெட்ரோல் அல்லது டீசலுடன் இந்த தண்ணீர் சேர்க்கப்படுகிறது.
சிசிடி செயல்முறையின் மூலம், தண்ணீரில் இருந்து உருவாகும் வாயு, பெட்ரோல் அல்லது டீசன் மூலக்கூறுகளை உடைத்து, அவற்றை சிறப்பான எரிபொருளாக மாற்றும். அது காரின் இன்ஜினுக்குள் செலுத்தப்பட்டு அதுவே வாகனத்தை இயக்கும் எரிபொருளாகச் செயல்படுகிறது.
செலவு குறைவு
பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, தண்ணீரைக் கொண்டு காரை இயக்கும் இந்த முறைக்கு ஆகும் செலவு ஒப்பீட்டளவில் சற்றே குறைவாக இருக்கும்.
அதேபோல இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இன்ஜினில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய வேண்டியதில்லை. இதனால் செலவும் அதிகம் ஆகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போது பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களிலேயே இந்த அமைப்பை எளிதாகப் பொருத்திக்கொள்ள முடியும்.
தண்ணீரால் மட்டுமே ஓடுமா?
ஒரு கார் முழுவதுமாகத் தண்ணீரால் மட்டுமே ஓடும் என்ற கருத்து முற்றிலும் உண்மை அல்ல. தண்ணீர் என்பது நேரடியாக ஒரு எரிபொருள் அல்ல, மாறாக, அதிலிருந்து ஆற்றலைப் பிரித்தெடுக்கக் கூடுதல் செயல்முறை அவசியம். தண்ணீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரித்தெடுத்து எரிபொருளாகப் பயன்படுத்தும் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தோடு பலரும் இதனைத் தொடர்புபடுத்துகின்றனர். ஆனால், அந்தச் செயல்முறை அதிக செலவு பிடிக்கும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிக்கலானதாகும்.
எனவே, தற்போதைய நிலையில் வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றி இயக்கும் வகையிலான எந்தவொரு சாதாரண காரும் உலகில் பயன்பாட்டில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards. She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.