எவ்வளவு நிறுவனங்கள் சந்தைக்கு வந்தாலும் அதற்கேற்ப முதலீட்டாளர்களும் புதிதாக வருகின்றனர்
பங்கு சந்தையில் பட்டியலிட ஏராளமான நிறுவனங்கள் வருவதற்கு ஏற்ப புதிய புதிய முதலீட்டாளர்களும் சந்தைக்கு வந்துகொண்டிருக்கின்றனர் என தேசிய பங்கு சந்தையின் வணிக மேம்பாட்டு தலைமை அதிகாரி ஸ்ரீராம் கிருஷ்ணன் தெரிவித்தார்.
தேசிய பங்கு சந்தை புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் 17ம் தேதி வருவது குறித்து சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, என்.எஸ்.இ.,யில் ஆண்டுக்கு சராசரியாக 260 நிறுவனங்கள் பட்டியலிடப்படுகின்றன. கிட்டதட்ட 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டுகின்றன. இந்த ஆண்டின் துவக்கத்தில் சிறிது தடுமாற்றம் இருந்தாலும், ஐ.பி.ஓ., வெளியீடு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் இந்த எண்ணிக்கை 200 நிறுவனங்கள் , 2 லட்சம் கோடி ரூபாய் என்பதை தாண்டும் என தெரிகிறது. இது நாட்டின் அதிவேக வளர்ச்சியை காட்டுகிறது.
இதில், ஏராளமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், அதிலும் எதிர்காலத்தில் யுனிகார்ன் நிறுவனங்களாக மாறக்கூடிய தன்மை கொண்ட நிறுவனங்களும் உள்ளன.
நாட்டின் மக்கள்தொகை 150 கோடி என்ற நிலையில், தற்போது பங்கு சந்தைகளில் கிட்டதட்ட 13.37 கோடி பேர் தான் வர்த்தகத்தில் உள்ளனர். எனவே, எவ்வளவு நிறுவனங்கள் சந்தைக்கு வந்தாலும், அதற்கேற்ப முதலீட்டாளர்களும் புதிதாக வருவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒவ்வொரு மாதமும் 20 முதல் 30 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் துவக்கப்படுகின்றன
படவிளக்கம்: என்.எஸ்.இ., புதிய பங்கு வெளியீடு குறித்து சென்னையில் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், (இடமிருந்து) ஐ.டி.பி.ஐ., கேப்பிடல் துணை தலைவர் பிரணாய் அகர்வால், என்.எஸ்.இ., வணிக மேம்பாட்டு தலைமை அதிகாரி ஸ்ரீராம் கிருஷ்ணன், தலைமை நிதி அதிகாரி இயான் டீசவ்சா.
சி.ஏ.எஸ்., எனப்படும் வர்த்தக நேர முடிவு ஏலம், சென்செக்ஸ், நிப்டி புள்ளிகளில் முன்பிருந்த இடைவெளியில் குழப்பமான நிலையை ஏற்படுத்தியுள்ளதே? இப்போது தான் உண்மையான நிலை தெரிந்திருக்கிறது. பி.எஸ்.இ.,யில் வர்த்தகமே இல்லாத போது, அது என்.எஸ்.இ.,யின் அதிக வர்த்தகத்தை மறைத்து வந்திருக்கிறது. தற்போது சி.ஏ.எஸ்., வாயிலாக, அது வெளிப்பட்டிருக்கிறது. யூக வணிகம், இன்சைடர் டிரேடிங் ஆகியவற்றை தடுக்க என்ன நடவடிக்கை? சந்தை போக்கை கண்காணிக்க ஏ.ஐ., பயன்படுத்துகிறோம். கடந்த 2, 3 ஆணடுகளாக ஏ.ஐ., கைகொடுக்கிறது. ஐ.பி.ஓ., வருவது நிறுவனத்துக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்? விலை ஆய்வுக்காகவே ஐ.பி.ஓ., சந்தைக்கு வந்துள்ளோம், கூடுதல் நிதி திரட்ட அல்ல. நிறுவனத்தின் பயணத்தில் சரியான மதிப்பீடு மற்றும் துல்லியமான விலை ஆய்வை ஐ.பி.ஓ., வெளிப்படுத்தும். என்.எஸ்.இ.,யில் இந்த பங்கை வணிகம் செய்ய அனுமதி கேட்டுள்ளோம். செபி அனுமதிக்காக காத்திருக்கிறோம்.