ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி வரும் எண்ணெய் கப்பல்கள்
புதுடில்லி: ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய நிலையிலும், கச்சா எண்ணெயை ஏற்றிய 3 சரக்கு கப்பல்கள் இந்தியா நோக்கி வந்து கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் ஒப்பந்தத்தை மீறியதாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், 8.6 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு, 3 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து விட்டதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதில்; 94 இந்தியப் பணியாளர்களுடன் 8.6 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான சரக்குகளை ஏற்றி வரும் தேஷ் வைபவ், தேஷ் விபோர் மற்றும் சன்மார் ஹெரால்டு ஆகிய 3 இந்தியக் கொடி ஏந்திய கச்சா எண்ணெய் டாங்கர் கப்பல்கள் இன்று ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்தன. விரைவில், இந்தக் கப்பல்கள் இந்தியா வரவுள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்.