இலங்கை தொடரை 2
இலங்கை தொடரை 2-0 வென்றால், WTC பட்டியலில் இந்திய அணி எவ்வளவு புள்ளிகள் பெறும்?
மும்பை: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுமையாகக் கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பில் நீடிக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அவ்வாறு நடக்கும் பட்சத்தில், இலங்கை அணி WTC புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது WTC புள்ளிகள் பட்டியலில் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 48.15 சதவீத புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், இலங்கை அணி 41.67 சதவீத புள்ளிகளுடன் அதற்கு அடுத்த இடத்திலும் உள்ளன.
தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ள வீடியோவில், இரு அணிகளுக்கும் இடையிலான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெறுபவர்களுக்கே WTC இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகும் என்று சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
"இந்த தொடரில் நாம் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தால், நமது புள்ளிகள் 39 சதவீதமாகக் குறையும். அதே நேரத்தில் இலங்கை 61 சதவீத புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறும். இந்தியாவை 2-0 என இலங்கை வீழ்த்தினால், அவர்கள் இறுதிப் போட்டி பந்தயத்தில் நீடிப்பார்கள். அதன் பிறகு அவர்களுக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல நல்ல வாய்ப்பு இருக்கும், இல்லையெனில் அது அவர்களுக்கு எட்டாக்கனியாகவே போகும்" என்று சோப்ரா கூறினார்.
"ஒருவேளை இந்திய அணி இந்தத் தொடரை 2-0 எனக் கைப்பற்றினால், நாம் 57.58 சதவீத புள்ளிகளை எட்டுவோம். நாம் தொடரை முழுமையாக வென்றால் ஓரளவு லாபம் இருக்கும். ஆனால் தொடர் 1-1 என சமனில் முடிந்தால், நமக்கு எந்த பயனும் இருக்காது. ஏனெனில் இந்தியா 48.48 சதவீதத்திலும், இலங்கை 44.44 சதவீதத்திலும் இருக்கும், இதனால் அணிகளின் நிலையில் எந்த மாற்றமும் இருக்காது," என்று அவர் மேலும் கூறினார்.
"முன்னோக்கிப் பார்க்கும்போது, நியூசிலாந்தில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் உள்ளது, அங்கு வெற்றி பெறுவது எளிதல்ல. அங்கு ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் 50 சதவீத புள்ளிகளை இழக்க நேரிடும். அது கடினமான தொடராக இருக்கும். அதற்குப் பிறகு, இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் உள்ளது. இதனால் இந்தியா தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய அணி தங்களுக்கு மீதமுள்ள 9 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று குறிப்பிட்ட சோப்ரா, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற மீதமுள்ள ஒன்பது போட்டிகளில் எட்டில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று கணித்துள்ளார்.