IND A vs SL
IND A vs SL- ஒரு பந்து கூட வீசப்படவில்லை.. ஆனால் ஸ்கோர்போர்டு 10/0 இலங்கை ஏ அணிக்கு ஏன் இலவச ரன்கள்?
டம்புள்ளா: முத்தரப்பு ஏ தொடரின் (Tri-Nation A Series) நான்காவது போட்டியின் போது ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியது. இலங்கை ஏ அணி தனது இன்னிங்ஸைத் தொடங்குவதற்கு முன்பாகவே, அதாவது முதல் பந்து வீசப்படுவதற்கு முன்னரே அவர்களின் ஸ்கோர்போர்டு 10/0 எனக் காட்டியது.
ரங்கிரி டம்புள்ளா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் விப்ராஜ் நிகாம் ஆகியோரின் சிறப்பான அரைசதங்களின் உதவியுடன் இந்தியா ஏ அணி 265 ரன்கள் எடுத்தது. இருப்பினும், இப்போட்டியின் விவாதப் பொருளாக மாறியது இலங்கை ஏ அணியின் இன்னிங்ஸ் தான். ஏனெனில், அவர்கள் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளாமல் 10 ரன்களைப் பெற்றனர்.
இலங்கை ஏ அணிக்கு ஏன் 10 ரன்கள் வழங்கப்பட்டன?
இந்தியா ஏ அணி தனது பேட்டிங்கின் போது ஆடுகளத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் (protected area) மீண்டும் மீண்டும் ஓடியதற்காகப் பெனால்டியாக இந்த ரன்கள் வழங்கப்பட்டன.முதலில் 33வது ஓவரில், ஆல்-ரவுண்டர் அனுகுல் ராய் நடுவே ஓடியது கண்டறியப்பட்டு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு ஓவர்கள் கழித்து, 35வது ஓவரில் விப்ராஜ் நிகாம் அதே தவறை மீண்டும் செய்தார்.
இதையடுத்து நடுவர் அவருக்கு இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட எச்சரிக்கையை வழங்கினார்.கிரிக்கெட் விதிகளின்படி, இரண்டாவது முறை இதே தவறைச் செய்யும்போது பந்துவீசும் அணிக்கு (இங்கு இலங்கை ஏ அணிக்கு) ஐந்து பெனால்டி ரன்கள் வழங்கப்படும்.ஆனால், 37வது ஓவரில் நிகாம் மீண்டும் அதே தவறைச் செய்ததால், மேலும் ஐந்து ரன்கள் பெனால்டியாக வழங்கப்பட்டது.
இதன் விளைவாக, இலங்கை ஏ அணி தங்களது சேஸிங்கை தொடங்குவதற்கு முன்பாகவே 10 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. இதனால், இன்னிங்ஸின் முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பே ஸ்கோர்போர்டு 10/0 என்று காட்டியது.
விதிமுறைகள் கூறுவது என்ன?
கிரிக்கெட் விதிகளின்படி, பேட்டர்கள் வேண்டுமென்றோ அல்லது அஜாக்கிரதையாகவோ பிட்ச்சின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஓடக்கூடாது.இத்தகைய விதிமீறலுக்கு நடுவர் முதலில் எச்சரிக்கை விடுக்கிறார். அதன் பிறகும் பேட்டிங் செய்யும் அணி இதே தவறைத் தொடர்ந்தால், ஒவ்வொரு முறைக்கும் ஐந்து ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும்.
ஷூக்களின் ஸ்பைக்குகள் ஆடுகளத்தின் தன்மையை சேதப்படுத்தி, கரடுமுரடான பகுதிகளை உருவாக்கக்கூடும் என்பதால் இந்த விதிமுறை உள்ளது. இது போட்டியின் பிந்தைய கட்டங்களில் பந்து வீச்சு நிலைமைகளை கணிசமாக பாதிக்கலாம்.
இந்தியா ஏ அணி மீண்டும் மீண்டும் இந்த விதிமீறலில் ஈடுபட்டதால், அவர்களுக்கு 10 ரன்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த ரன்கள் அனைத்தும் இலங்கை ஏ அணி தனது சேஸிங்கை தொடங்குவதற்கு முன்பே அதன் கணக்கில் சேர்க்கப்பட்டன.
இந்தியா ஏ அணியைக் காப்பாற்றிய ஷெட்ஜ் - நிகாம் கூட்டணி
முன்னதாக, வைபவ் சூர்யவன்ஷி இந்தியா ஏ அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அளித்தார். ஆனால் அவரால் அதனைப் பெரிய ஸோகாராக மாற்ற முடியவில்லை. ஒருகட்டத்தில் இந்தியா ஏ அணி 143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களான சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் விப்ராஜ் நிகாம் ஜோடி அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷெட்ஜ் 66 பந்துகளில் 72 ரன்களும், நிகாம் 49 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால், நடுவரிசை பேட்டிங் சரிவிலிருந்து மீண்ட இந்தியா ஏ அணி இறுதியாக 265 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது.