இந்தோனீசியாவுக்கு அருகே 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
மாவ்மெரெ (இந்தோனீசியா): இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதிக்கு அருகே ஏற்பட்ட ரிக்டரில் 7.7 அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டனர்.
இதுவரை இருவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளதாகவும் இறுதி மரண எண்ணிக்கை பின்னர் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படும் என்றும் அவசரச் சேவை அதிகாரி ஒருவர் கூறினார். நிலநடுக்கத்தால் கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்களும் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஃபுளோரஸ் தீவுக்கு அருகே சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) காலை நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலைய (யுஎஸ்ஜிஎஸ்) அதிகாரிகளும் இந்தோனீசிய அதிகாரிகளும் முன்னதாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் தாங்கள் இருக்கும் இடங்களிலிருந்து வெளியேறினர்.
நிலநடுக்கம் ஃபுளோரஸ் தீவின் வடமேற்குப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 68 கிலோமீட்டர் தொலைவில் தொடங்கியதாக யுஎஸ்ஜிஸ் குறிப்பிட்டது.