இந்தோனீசியாவுக்கு அருகே 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; பலர் மரணம்
மாவ்மெரெ (இந்தோனீசியா): இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதிக்கு அருகே சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக மாநில ஆளுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புக்காக வீடுகளிலிருந்து வெளியேறினர்.
ஃபுளோரஸ் தீவுக்கு அருகே உலுக்கிய நிலநடுக்கத்தால் அத்தீவின் நான்கு நகரங்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக மீட்புப் பணி அதிகாரியான ஃபாத்துர் ரகுமான் கூறினார். நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டேரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
பல இடங்களில் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் உலுக்கி கிட்டத்தட்ட மூன்று மணிநேரத்துக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை அகற்றப்பட்டது.
சனிக்கிழமை காலை நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலைய (யுஎஸ்ஜிஎஸ்) அதிகாரிகளும் இந்தோனீசிய அதிகாரிகளும் முன்னதாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நிலநடுக்கம் தொடங்கிய பகுதி
நிலநடுக்கம், ஃபுளோரஸ் தீவின் வடமேற்குப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 68 கிலோமீட்டர் தொலைவில் தொடங்கியதாக ‘யுஎஸ்ஜிஸ்’ குறிப்பிட்டது.
முதல் நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.58 மணிக்கு 15 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்தோனீசியப் புவிஇயற்பியல் அமைப்பான ‘பிஎம்கேஜி’ பதிவுசெய்தது. அதே இடத்தைப் பின்னர் வலுவான நில அதிர்வுகள் உலுக்கின. ரிக்டர் அளவில் 6.1 எனப் பதிவான நில அதிர்வும் அவற்றில் அடங்கும்.
பாதிக்கப்பட்ட பகுதிகள்
கிழக்கு நுசா தெங்காரா, மேற்கு நுசா தெங்காரா, தெற்கு சுலாவெசியின் சில பகுதிகளில் வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதாக இந்தோனீசியத் தேசியப் பேரிடர்த் தடுப்பு அமைப்பான ‘பிஎன்பிபி’ அறிக்கை மூலம் தெரிவித்தது. பல இடங்களில் அதிர்வுகள் ஒரு நிமிடத்துக்கும் மேல் நீடித்ததாகக் குடியிருப்பாளர்கள் பலர் கூறியதாகவும் அமைப்பு குறிப்பிட்டது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இதற்கிடையே, கடலடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி எழும் அபாயம் இருக்காது என்று அந்நாட்டின் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்தது.
நிலத்தடிச் செயல்பாடுகளால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய ‘பசிபிக் ரிங் ஆஃப் ஃபையர்’ எனும் வட்டாரத்தில் இந்தோனீசியா அமைந்துள்ளது.