இந்தோனீசியாவுக்குள் ‘கோர்செட்’ கவசத்தில் போதைப்பொருளைக் கடத்த முயன்றதாக நம்பப்படும் மலேசியர், உலகம் செய்திகள்
பெட்டாலிங் ஜெயா: ‘கோர்செட்’ எனப்படும் உடல் கவச ஆடைக்குள் போதைப்பொருளை வைத்து இந்தோனீசியாவுக்குள் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் பிடிபட்டுள்ளார்.
மலேசியாவைச் சேர்ந்த அந்த 22 வயது ஆடவர் கிட்டத்தட்ட ஒரு கிலோகிராம் அளவு மெத்தம்ஃபெமினையும் 1,000க்கும் அதிகமான எக்ஸ்டசி மாத்திரைகளையும் வைத்திருந்ததாக நம்பப்படுகிறது.
சந்தேக நபர் சுரபாயாவின் ஜுவாண்டா அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) பிடிபட்டதாக இந்தோனீசியாவின் ஜகார்த்தா குளோப் செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவர் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பாத்திக் ஏர் விமானத்தில் வந்தார்.
அந்நபரின் கோர்செட் கவசத்தினுள் 990 கிராம் மெத்தம்ஃபெட்டமினும் 1,089 எக்ஸ்டசி மாத்திரைகளும் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஜகார்த்தா குளோப் குறிப்பிட்டது. தனக்கு நிதிப் பற்றாக்குறையும் அதிக கடன் சுமையும் இருந்ததால் அனைத்துலக போதைப்பொருள் கட்டமைப்பு ஒன்றுக்குப் பணியாற்றத் தான் ஒப்புக்கொண்டதாக அந்த ஆடவர் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர் தான் அணிந்திருந்த கோர்செட் கவசத்தினுள் போதைப்பொருள்களை ஒளித்து வைத்துக் கொண்டுவர முயற்சி செய்ததாகவும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் ஜுவாண்டா கடல், ஆகாயப்படைத் தளபதி ஹெனோக் நசாய்ரஸ் விர்ஸவான் திங்கட்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார் என்று ஜகார்த்தா குளோப் தெரிவித்தது.