📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 13, 2026 12:01 AM

“கமிஷன் வாங்கும் தி.மு.க. தலைகள்?”

“கமிஷன் வாங்கும் தி.மு.க. தலைகள்?”

“கமிஷன் வாங்கும் தி.மு.க. தலைகள்?” – நிர்மல்குமார் பேச்சால் பரபரப்பு!

தூத்துக்குடியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மேயர் மீது அமைச்சர் நிர்மல்குமார் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மேயர் ஜெகன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற த.வெ.க. தூ விழாவில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், 'அமைச்சர்களாக வலம் வந்த கீதாஜீவனும், அனிதா ராதாகிருஷ்ணனும் இங்குள்ள தொழிற்சாலைகளில் கமிஷன் வாங்கி பங்கு போடுவதில்தான் கவனம் செலுத்தினார்கள்.

இப்போதும் அதைத்தான் செய்கிறார்கள். அமைச்சர் அக்காவும் மேயர் தம்பியும் கல்குவாரி வைத்து கனிம வளங்களை கொள்ளை அடித்துவிட்டனர். துறைமுக நகரமாக இருந்தாலும் தூத்துக்குடி வளர்ச்சி பெறாததற்கு இவர்களே காரணம்” என கொளுத்தி போட்டதுதான் தி.மு.கவை ஏகத்துக்கும் சீண்டியிருக்கிறது. தூத்துக்குடி மத்திய மாவட்ட த.வெ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடந்தது.

அதில் பங்கேற்று பேசிய மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், 'முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த கீதாஜீவனும், அனிதா ராதாகிருஷ்ணனும் இப்போதும் சில குறிப்பிட்ட நிறுவனங்களில் கமிஷன் வசூல் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தூத்துக்குடியில் இது எழுதப்படாத விதியாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 70 கல் குவாரிகள் உள்ளன.

அதில் பெரும்பாலானவை அனுமதியின்றி இயங்குகின்றன. இங்கிருந்து எடுக்கப்படும் கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் நம் மக்கள் அதிக விலை கொடுத்து கல், மணல் வாங்க வேண்டியிருக்கிறது. இவற்றை நிறுத்தத்தான் அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணனும், கீதாஜீவனும் ரௌடியிசம் செய்துவருகிறார்கள்.

கீதாஜீவனின் தம்பி மேயர் ஜெகன், கமிஷன் வாங்காமல் எந்த பணியையும் செய்வதில்லை. மழை வெள்ளத்தில் தூத்துக்குடி பாதிக்கப்பட்டபோது மக்களை காப்பாற்றாமல் சேலத்தில் நடந்த தி.மு.க. மாநாட்டுக்கு சென்றவர்தான் இந்த ஜெகன்' என தாக்கியதுடன் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. மூத்த நிர்வாகிகளையும் ஒட்டுமொத்தமாக வறுத்தெடுத்தார். அமைச்சர் நிர்மல்குமாரின் இந்தப் பேச்சு தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துவிட்டது.

சொல்லிவைத்ததுபோல முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதா கிருஷ்ணன், கீதாஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் ஆகியோர் ஒரே நேரத்தில், நிர்மல்குமாரை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். அந்த அளவுக்கு அமைச்சரின் பேச்சு அவர்களை காயப்படுத்திவிட்டதா? அதை அவர்களிடமே கேட்டோம். கீதாஜீவன் நம்மிடம், "தேர்தலின்போது பொய் புரட்டுகளைப் பேசி, ரீல்ஸ் போட்டு சிறுவர்களின் மனதை களங்கப்படுத்தி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துவிட்டனர்.

உள்ளாட்சித் தேர்தலிலும் அதே பாணியை கடைப் பிடிக்க நினைக்கிறார்கள். அதற்காக அனுப்பி வைக்கப் பட்டவர்தான் அமைச்சர் நிர்மல்குமார். தூத்துக்குடி தொழில் நிறுவனங்களில் நான் வசூல் செய்தேன் என்கிறார். அதை அவரால் நிரூபிக்க முடியுமா? கட்சி நிகழ்ச்சி நடத்தக்கூட நான் எந்த தொழில் நிறுவனங்களிலும் வசூல் செய்வதில்லை. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க, அ.ம.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளில் பயணித் தவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பதால் தலைகால் தெரியாமல் ஆடுகிறார்.

அவர் வாயிலிருந்து வருவதெல்லாம் பொய்தான். பொய்யைத் தவிர வேறு எதையும் பேசக்கூடாது என்று முடிவு கட்டியிருக்கிறார்போல் தெரிகிறது. அவர் எதற்காக தூத்துக்குடிக்கு வந்தார், யாரையெல்லாம் சந்தித்தார், எதற்காக சந்தித்தார் என்கிற விவரம் வெளியே வரும்போது அவரது நேர்மை அம்பலத்துக்கு வந்துவிடும்" என்றார்.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, "அமைச்சர் என்கிற பொறுப்பை மறந்து அவர் பேசியிருக்கிறார். அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். மின் கணக்கீட்டில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. மூன்று லட்சத்து 70 ஆயிரம் பேர் மின்கட்டண கணக்கீட்டில் குளறுபடி இருப்பதாக புகார் அளித்துள்ளனர். அரசு வெளியிட்ட தகவலிலேயே இவை இருக்கிறது. இப்படி அவர் சார்ந்த துறையில் இருக்கும் கோளாறுகளை மறைக்க ஊர் ஊராகப் போய் தி.மு.க.வினரை குறைசொல்லி வருகிறார். அவரது பேச்சை த.வெ.க.வினரே ரசிக்கவில்லை என்பதுதான் உண்மை" என்றார்.

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கேட்டோம். "தூத்துக்குடி தெர்மல் நகர் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் சாம்பல் காற்றில் கலந்து உப்பளங்களை மாசுபடுத்தி வருகிறது. துறைமுக சாலையில் மக்களால் பயணம் செய்யவே முடியவில்லை. அனல் மின் நிலையத்தில் தேங்கும் நிலக்கரி சாம்பல் அப்படியே கடலுக்குள் கலக்கப்படுகிறது. இதன்மூலம் கடல் மாசுபட்டு வருகிறது.

அதை தடுக்க மின்துறை அமைச்சரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தனது தவறை மறைக்க எங்கள் மீது புழுதிவாரி வீசியிருக்கிறார்.மழை வெள்ளத்தின்போது நான் சேலத்துக்கு சென்றுவிட்டேன் என்று ஒரு பொய்யை சொல்லியிருக்கிறார். மழை வெள்ளத்தால் தூத்துக்குடி பாதிக்கப்பட்டபோது மக்களோடு மக்களாக நின்று பணியாற்றியது யார் என்பது உள்ளூர் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

உள்ளாட்சியில் நாங்கள் செய்த சொல்லும், நலத்திட்ட உதவி வாங்க வந்தவர்கள் கைதட்ட வேண்டும், விசில் அடிக்க வேண்டும் என்பதற்காக இல்லாததையும் பொல்லாததையும் பேசியிருக்கிறார் நிர்மல்குமார்" என்றார். பணிகளை இங்குள்ள 60 வார்டுகளும் அரசியல்வாதிகளுக்கு இடையேயான கருத்து மோதல்களால் தூத்துக்குடியின் அமைதி கெட்டுவிடக் கூடாது.