📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 09, 2026 10:33 AM

“கங்குலிக்கு தடை விதித்திருப்பேன்”.. 2001 டாஸ் சர்ச்சை குறித்து ஜவகல் ஸ்ரீநாத் அதிரடி பேச்சு

“கங்குலிக்கு தடை விதித்திருப்பேன்”.. 2001 டாஸ் சர்ச்சை குறித்து ஜவகல் ஸ்ரீநாத் அதிரடி பேச்சு

“கங்குலிக்கு தடை விதித்திருப்பேன்”.. 2001 டாஸ் சர்ச்சை குறித்து ஜவகல் ஸ்ரீநாத் அதிரடி பேச்சு

சென்னை: கடந்த 2001ம் ஆண்டு நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாவை டாஸ் போடுவதற்கு காத்திருக்க வைத்தார் அப்போதைய இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி. அதை செய்ததற்காக அவருக்கு சில போட்டிகளில் விளையாடத் தடை விதித்திருப்பேன் என முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2001ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி டாஸ் போடுவதற்கு மைதானத்திற்கு வர தாமதமானது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் வாஹ் மைதானத்தில் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கிரிக்கெட் வரலாற்றில் இந்த சம்பவம் ஒரு மைண்ட் கேம் ஆகவும் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் மாறியது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும், தற்போதைய ஐசிசி போட்டி நடுவருமான (match refree) ஜவகல் ஸ்ரீநாத் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அப்போது பேசிய அவர், "ஒருவேளை அந்த போட்டியில் நான் போட்டி நடுவராகப் பணியாற்றியிருந்தால், ஸ்டீவ் வாவை மைதானத்தில் காத்திருக்க வைத்ததற்காக கங்குலிக்கு சில போட்டிகளில் விளையாடத் தடை விதித்திருப்பேன்" என்று கூறினார்.

"மைதானத்தில் போட்டி விதிகள் மற்றும் கிரிக்கெட் மரபுகளுக்கு விளையாட்டு வீரர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் எதிரணி வீரர்களை மதிப்பதும், போட்டி விதிமுறைகளைப் பின்பற்றுவதும் மிகவும் முக்கியம்" என்று ஸ்ரீநாத் கூறினார்.

அப்போது தனது பிளேசர் கோட் கிடைக்காததால் தான் வரத் தாமதமானதாக கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பதிலடி கொடுக்கவே தான் வேண்டுமென்றே தாமதமாக சென்றதாகப் பின்னர் அவரே ஒரு பேட்டியில் கூறினார். அந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. குறிப்பாக கங்குலி தாமதமாக டாஸ் போடச் சென்ற கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்தியா ஃபாலோ ஆன் பெற்றும் பின்னர் போராடி வெற்றி பெற்றது. அது சிறந்த டெஸ்ட் போட்டியாக பார்க்கப்படுகிறது.