கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தூய்மை பணியாளர்கள் 4
கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தூய்மை பணியாளர்கள் 4-வது நாளாக தொடர் போராட்டம்!
கரூர்: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வரும் தொடர் காத்திருப்பு போராட்டம் 4-வது நாளாக நீடித்து வருகிறது.
கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், 62-ன் படி ஊதியம் வழங்க வேண்டும், பணிச்சுமையை குறைக்க வேண்டும், போனஸ் வழங்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
மேலும், 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்தும், தற்போது நிதி நெருக்கடியை காரணம் காட்டி கால அவகாசம் கோருவதாக அரசை விமர்சித்துள்ளனர்.
போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் அலட்சியமாக பதிலளிப்பதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பணிக்குத் திரும்புமாறு அதிகாரிகள் எச்சரிப்பதாகவும் தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.