கற்பனை கூட செய்ய முடியாத நிலையில் பாகிஸ்தான்.. இந்த ஜாம்பவான் வந்தாதான் உருப்படும்.. லத்தீப் பேச்சு
கற்பனை கூட செய்ய முடியாத நிலையில் பாகிஸ்தான்.. இந்த ஜாம்பவான் வந்தாதான் உருப்படும்.. லத்தீப் பேச்சு
கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக படுமோசமான சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அந்த அணியை மீட்டெடுக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட டெஸ்ட் ஜாம்பவான் வீரர் ஒருவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் வலியுறுத்தியுள்ளார்.
கராச்சியில் நடைபெற்ற யூனிஸ் கான் கிரிக்கெட் அகாடமி தொடக்க விழாவில் பேசிய ரஷீத் லத்தீப், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் மோசின் நக்விக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "சில காலத்திற்கு முன்பு மோசின் நக்வி, யூனிஸ் கானை அழைத்து பேசினார். அது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நான் நினைத்தேன். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் சரியான திசையில் செல்ல வேண்டும் என்றால், யூனிஸ் கானை பிசிபி தலைவர் தனது திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் மிகவும் பின்தங்கிவிட்டோம். தற்போது டெஸ்டில் 7-வது இடத்திலும், ஒருநாள் போட்டிகளில் 5 அல்லது 6-வது இடத்திலும், டி20 போட்டிகளில் 9-வது இடத்திலும் இருக்கிறோம். இந்த மோசமான நிலையை நாம் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
"யூனிஸ் கான் போன்ற நேர்மையான, அனுபவமிக்க முன்னாள் வீரர்களை பிசிபி நம்ப வேண்டும். நாட்டை முதன்மையாகவும் தங்களை இரண்டாவதாகவும் நினைக்கும் நபர்களே தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குத் தேவை. யூனிஸ் கான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்தவும், அடுத்த தலைமுறை இளம் வீரர்களை உருவாக்கவும் பெரும் பங்காற்ற முடியும்." என்று ரஷீத் லத்தீப் கூறினார்.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் யூனிஸ் கான் மட்டுமே. அவர் 2000 முதல் 2017 வரையிலான தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 சதங்களுடன் 10,099 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 2009-ல் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை வென்றபோது அவர்தான் அணியின் கேப்டனாக இருந்தார்.