கரூரில் அரசு பணி வழங்கிய விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் நா.த.க., கேவியட் மனு
- டில்லி சிறப்பு நிருபர் -
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.
இதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி, கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
கரூரில், கடந்தாண்டு த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை, கடந்த 10ம் தேதி முதல்வர் விஜய் வழங்கினார்.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பணி நியமனம் வழங்கும் அரசாணையை ரத்து செய்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கவும், அரசாணையை செல்லுபடியாக்கவும் கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரர்களில் ஒருவரான நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசோ வேறு தரப்பினரோ தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் போது, எங்கள் தரப்பு வாதங்களை கட்டாயம் கேட்க வேண்டும்.
'எங்கள் தரப்பு நியாயத்தை கேட்காமல் எவ்வித உத்தரவோ தடையோ பிறப்பிக்கக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.