மேகதாது அணை விவகாரம்…
கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரை தமிழக முதல்வர் விஜய் பெங்களூரில் சந்திக்கவிருக்கிறார். இந்தச் சூழலில், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்குச் சாதகமான ஒரு பதிலை நாடாளுமன்றத்தில் மத்திய ஜல்சக்திதுறை இணையமைச்சர் தெரிவித்திருக்கும் விவகாரம், தமிழகத்தில் தகிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன், `தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது’ என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
கர்நாடகா முதல்வராக டி.கே.சிவக்குமார், ஜூன் 3-ம் தேதி பதவியேற்ற பிறகு, மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தி ருக்கின்றன. இந்த நிலையில், பா.ம.க மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய ஒரு கேள்விக்கு, மத்திய ஜல்சக்திதுறை இணையமைச்சர் ராஜ் பூஷண் சௌத்ரி எழுத்து மூலமாக ஜூலை 27-ம் தேதி நாடாளுமன்றத்தில் ஒரு பதிலளித்தார். அதில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே கட்டுமானம் மேற்கொள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடக மாநிலம் பெற வேண்டும் என்று 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை’ என்று அவர் கூறியிருக்கிறார்.
அந்த பதில் கர்நாடகாவுக்குச் சாதகமாக இருப்பதால், மேகதாது விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக் கிறது. தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியிருக் கின்றன. அதேநேரம், கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் கூட்டத்தை, ஜூலை 28-ம் தேதி டெல்லியில் நடத்தினார் கர்நாடகா முதல்வர். அதில், கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய கல்வியமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய இணையமைச்சர் ஷோபா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.