📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 19, 2026 02:33 PM

“மேட்ச் நடக்குமா என்றே சந்தேகப்பட்டோம் ஆனால் ஜெயித்தோம்”.. கேப்டன் சுப்மன் கில் மகிழ்ச்சி

“மேட்ச் நடக்குமா என்றே சந்தேகப்பட்டோம் ஆனால் ஜெயித்தோம்”.. கேப்டன் சுப்மன் கில் மகிழ்ச்சி

“மேட்ச் நடக்குமா என்றே சந்தேகப்பட்டோம் ஆனால் ஜெயித்தோம்”.. கேப்டன் சுப்மன் கில் மகிழ்ச்சி

காலே: இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வரலாற்று வெற்றிக்குப் பின்னர் பேசிய இந்திய கேப்டன் சுப்மன் கில், அணியின் செயல்பாடு மற்றும் வீரர்களின் பங்களிப்பு குறித்துப் பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த வெற்றி குறித்து சுப்மன் கில் பேசுகையில், "இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம், ஆனால் மோசமான வானிலை காரணமாகப் போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது. எனினும், எங்கள் வீரர்கள் சூழ்நிலையை உணர்ந்து சிறப்பாகச் செயல்பட்டனர். இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் வேகமாக ரன் குவிக்க முயன்று சில விக்கெட்டுகளை இழந்தோம். 4 மற்றும் 5-வது நாட்களில் எத்தனை ஓவர்கள் வீச முடியும் என்று தெரியாததால் தான் அதிரடியாக விளையாடினோம். இந்த ஆடுகளத்தில் ரன் குவிப்பது எளிதல்ல என்பதால் இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை" என்றார்.

இந்திய அணி வீரர்களைப் பாராட்டிய கேப்டன் கில், "மானவ் சுதார் மிக அற்புதமாகப் பந்துவீசினார். அவர் எதிர்காலத்தில் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடக்கூடிய தகுதியுள்ள வீரர். அதேபோல் தேவ்தத் படிக்கல் முதல் இன்னிங்ஸில் 167 ரன்கள் குவித்து அசத்தினார். சதம் அடித்த பிறகும் அவர் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய விதம் பார்க்கவே அருமையாக இருந்தது" என்றார்.

இறுதியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்துப் பேசிய கில், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதே எங்கள் இறுதி இலக்கு. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது எளிதானது அல்ல, எனவே இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறினார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களும் எடுத்தது. 372 ரன்கள் இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 206 ரன்களுக்கு ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.