📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 01, 2026 04:04 AM

மேயர், நகராட்சி தலைவர்கள் அரசுடன் ஒத்துழைப்பதில்லை: ஆதவ் குற்றச்சாட்டு

மேயர், நகராட்சி தலைவர்கள் அரசுடன் ஒத்துழைப்பதில்லை: ஆதவ் குற்றச்சாட்டு

சென்னை: ''தி.மு.க., மேயர்கள், நகராட்சி தலைவர்கள், த.வெ.க., அரசுடன் ஒத்துழைப்பதில்லை,'' என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியதால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

த.வெ.க., - தங்கப்பாண்டி: கடந்த ஆட்சியில், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பாக, 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

தி.மு.க., - கே.என்.நேரு: மதுரை மாநகராட்சியில், சொத்து வரி குற்றச்சாட்டு தொடர்பாக, தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஐந்து அதிகாரிகள், மேயர், ஐந்து மண்டல தலைவர்கள் நீக்கப்பட்டனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: ஒட்டுமொத்த மதுரை மாநகராட்சியும் ஊழலில் ஊறிப்போனது. இதை எதிர்த்து மக்கள் போராடிய பின், மேயரின் கணவர் கைது செய்யப்பட்டார். மேயர் ராஜினாமா செய்தார்.

அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் நடந்துள்ளது. எந்தெந்த மாநகராட்சியில் ஊழல் நடந்தது என்பதை விரைவில் வெளிப்படுத்துவோம்.

கே.என்.நேரு: ஆட்சி, அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. காவல்துறை உங்களிடம் இருக்கிறது. தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்.

அமைச்சர் நிர்மல்குமார்: மதுரை மாநகராட்சியில் மட்டும், 60 ஆயிரத்துக்கும் அதிகமான வணிக கட்டடங்களுக்கான மதிப்பீடு சரியாக செய்யப்படவில்லை. மின் இணைப்பில் வணிகப் பயன்பாடு என்று இருக்கிறது. ஆனால், சொத்து வரியில் வேறு விதமாக இருக்கிறது. அதனால், கடந்த இரண்டு மாதங்களாக மறுமதிப்பீடு செய்து வருகிறோம். சென்னையிலும் மறுமதிப்பீடு செய்ய இருக்கிறோம். தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது.

கே.என்.நேரு: தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாதவாறு செய்யுங்கள் என்று தான் சொல்கிறோம்.

அமைச்சர் நிர்மல்குமார்: மேலிடத்திற்கு செல்ல வேண்டிய பங்கு சரியாக போகவில்லை என்றால் தான், தி.மு.க., ஆட்சியில் ஊழல் வெளிச்சத்திற்கு வரும். அப்படி மேலிடத்திற்கு போக வேண்டிய பங்கு சரியாக போகாததால் தான், மதுரை மாநகராட்சி ஊழல் வெளியே வந்தது. இதுகுறித்தும் விரிவான விசாரணை நடந்து வருகிறது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: ஒவ்வோர் ஊரிலும் பெண்கள் தண்ணீருக்காக குடங்களை துாக்கிக் கொண்டு அலைகின்றனர். வீடுகளுக்கு குழாய் வழியாக தண்ணீர் கொடுக்க முடியாத அரசாகவே இருக்கிறோம். இன்றும், 25 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தி.மு.க.,விடம் தான் உள்ளன.

தமிழகத்தில் ஆட்சி, அதிகாரம் மாறி விட்டது. ஆனாலும், உள்ளாட்சி துறையில் அதிகாரம் மாறவில்லை. தி.மு.க., மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள், இந்த அரசுடன் ஒத்துழைப்பதில்லை. இன்னும் ஆறு மாதங்களில், உள்ளாட்சி தேர்தல் வரும்.

அப்போது, 90 சதவீதம் நாங்கள் வெற்றி பெறுவோம். அப்போது, அனைத்து ஊழலுக்கான ஆதாரங்கள் வெளிவரும்.

கே.என்.நேரு: த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிதி ஒதுக்கப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அரசின் திட்டங்களை மேயர் செயல்படுத்தவில்லை எனில், கமிஷனரே அதை செயல்படுத்த முடியும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.