மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி இணை ஆணையரிடம் மனு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழில் நடத்த வேண்டும் என தெய்வ தமிழ்ப் பேரவையினர் இன்று கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா செப்.17-ல் நடைபெறுகிறது.
இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கோபுரக் கலச நன்னீராட்டு விழா, கருவறை பூசை, வேள்விச் சாலை ஆகிய மூன்றிலும் தமிழில் திருமுறைகள், தமிழ் வேத மந்திரங்கள் ஓத வேண்டும் என தமிழ்வேத ஆகம பாடசாலை நிறுவனரும், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினருமான சிம்மம் சத்தியபாமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஆக.24-ல் வழங்கிய தீர்ப்பில், மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கோபுரக் கலசம், கருவறை பூசை, வேள்விச்சாலை ஆகிய மூன்றிலும் சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதும்போது தமிழ் திருமுறை ஓதுவார்கள் பக்கமாக நின்று தமிழ் மந்திரங்களை ஓத அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த தீர்ப்பின்படி கோயில் நிர்வாகம் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் இன்று இணை ஆணையர் அலுவலகத்தில் பேரவை உறுப்பினர்கள் சிம்மம் சத்தியபாமா, ராசயோக சித்தர் பீட வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார், மாவட்ட அமைப்பாளர் கதிர் நிலவன் ஆகியோர் மனு அளித்தனர்.