மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல்... தமிழகம் முழுவதும் தொடங்கிய மெகா சர்வே!
சென்னை : தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணியான வீட்டு வசதி நிலை மற்றும் வீடுகளின் கணக்கெடுப்புப் பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. நாட்டின் எதிர்காலத் திட்டமிடல், நலத்திட்டங்கள் வகுத்தல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படைத் தரவுகளைத் திரட்டும் நோக்கில் இந்த மாபெரும் தேசியப் பணி மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கணக்கெடுப்புப் பணிகளைத் துல்லியமாகவும், திறம்படவும் செயல்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, தமிழகம் முழுவதும் மொத்தம் 19,000 மேற்பார்வையாளர்களின் நேரடி மேலார்வையின் கீழ், சுமார் 1 லட்சத்து 15,000 பயிற்சி பெற்ற கணக்கெடுப்பாளர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மாநிலத்தின் பட்டிதொட்டியெல்லாம் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று விவரங்களைச் சேகரிக்க உள்ளனர்.
இந்தக் கணக்கெடுப்பின் போது, வீடுகளின் கட்டமைப்பு நிலை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார இணைப்பு, சமையல் எரிவாயு பயன்பாடு மற்றும் வீட்டில் உள்ள முக்கிய சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் குறிக்கும் வகையில் மொத்தம் 33 கேள்விகளைக் கொண்ட பிரத்யேகப் படிவம் பயன்படுத்தப்படுகிறது.
கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று, பொதுமக்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டுத் தகவல்களைத் துல்லியமாகப் பதிவு செய்வார்கள். பொதுமக்கள் இந்த முக்கியப் பணியில் அரசு அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்கி, சரியான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.