முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த திமுக
சென்னை: ''முதல்வர் விஜய் குறித்து அவதுாறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசிய விளாத்திகுளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் மீது உரிமை குழு விசாரணை நடத்தப்படும்,'' என, சட்ட சபையில் நேற்று சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார்.
சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தின்போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், ''கானல் நீராகத்தான் பட்ஜெட் உள்ளது. தி.மு.க., திட்டங்களை இந்த அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. மாற்றத்திற்கான அரசு என கூறினர்; பெயர் மாற்றும் அரசாகத்தான் உள்ளது,'' என்றார்.
இதையடுத்து, அமைச்சர் நிர்மல்குமார், ''சட்டசபை குறித்தும், முதல்வர் விஜய் குறித்தும், மார்க்கண்டேயன் அவதுாறாக பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என கூறினார்.
உடனே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ''மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்க, காலையிலேயே சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்,'' என குறிப்பிட்டார்.
இதையடுத்து, சபாநாயகர் பிரபாகர் கூறியதாவது: சட்டசபையில் தரமாக மார்க்கண்டேயன் பேசுகிறார். ஆனால், வெளியில் அவர் பேசியது சட்டசபை மாண்புக்கு ஏற்புடையதாக இல்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பொது மக்களும் எனக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
'மார்க்கண்டேயன் பேசியது நியாயம்' என தி.மு.க.,வினர் கூறினால், என்னிடம் இரண்டு வித முடிவுகள் உள்ளன.
ஒன்று, சபையில் ஓட்டெடுப்பு நடத்தி, பெரும்பான்மை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மற்றொன்று , உரிமை குழுவில் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கலாம். இப்போது சபை உரிமை குழு இல்லை. அது அமைக்கப்பட்ட பின், அவர் மீதான விசாரணை நடத்தப்படும்.
ஆபாச பேச்சு பேசுபவர்கள், தங்கள் மனைவி மற்றும் குடும்ப பெண்களிடம் அது சரியானதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
ஆபாச பேச்சையும், வன்முறையை துாண்டுவதையும் தவிர்க்க வேண்டும். தவறு எங்கே நடந்தாலும், கட்சி தலைமை கண்டிக்க வேண்டும். இவ்வாறு சபாநாயகர்கூறினார்.
- - பிரபாகர், தமிழக சட்டசபை சபாநாயகர்
மார்க்கண்டேயன் மீது விசாரணை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்ததும், தி.மு.க., கொறடா வேலு, ''மார்க்கண்டேயன் பேசியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, வழக்கு நிலுவையில் உள்ளது. ஒரு பிரச்னைக்கு இரண்டு இடங்களில் விசாரித்து, தண்டனை வழங்குவது, தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்,'' என்றார். இதையடுத்து, மார்க்கண்டேயன் பேசுகையில், ''முதல்வர் விஜய் பற்றி நான் பேசியதை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, தி.மு.க., -- எம்.பி., கனிமொழி ஆகியோர் என்னை கண்டித்து, 'அப்படி பேசியிருக்கக் கூடாது' என அறிவுறுத்தினர். ''இந்த சபையின் கதவுகள் பூட்டப்படும் என்றதால், என்னை அறியாமல் கூறிய அந்த வார்த்தைகளை, நீங்கள் அருள் கூர்ந்து மறந்து விட வேண்டும்,'' என தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டார். அக்காட்சியை பார்த்ததும் நான் கலங்கி விட்டேன். வயதானவர்; அவர் ஓடி விடவா போகிறார்? தங்கள் கடமையை செய்யும்போது, மனிதாபிமானத்துடன் போலீசார் நடந்து கொள்ள வேண்டும். வயதில் முதியவரை இரவு நேரத்தில் கைது செய்தது தவறு.- பிரபாகர், தமிழக சட்டசபை சபாநாயகர்