மூன்று மடங்கு மின் கட்டணம்; லோ வோல்டேஜ் காரணமா?
சென்னை: தமிழகத்தில் பல வீடுகளில், கடந்த ஜூலை மாத மின் கட்டணம், மூன்று மடங்கிற்கு மேல் வந்ததற்கு, 'லோ வோல்டேஜ்' எனப்படும் குறைந்த மின்னழுத்த பிரச்னையும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலையில், மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டதில், வழக்கத்தை விட அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக, பல வீடுகளின் உரிமை யாளர்கள் புகார் தெரிவித்து உ ள்ளனர். அதன்படி, 9.60 லட்சம் வீடுகளில், கடந்த மே மாதத்தை விட, ஜூலையில் அதிக மின் கட்டணம் வந்துள்ளது. அதில், 3.70 லட்சம் வீடுகளில், மூன்று மடங்கிற்கு மேல் கட்டணம் வந்துள்ளது.
இதற்கு, தாமதமாக கணக்கு எடுத்தது முக்கிய காரணமாக இருந்தாலும், மின்னழுத்த பிரச்னையும் ஒரு காரணம் என, தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்து அதன் திறனுக்கு ஏற்ப, எத்தனை வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட வேண்டுமோ, அந்த எண்ணிக்கையில் மட்டுமே வினியோகம் செய்யப்பட வேண்டும்.
அதை விட, அதிக வீடுகளுக்கு மின் வினியோகம் செய்தால், குறைந்த மின்னழுத்த பாதிப்பு ஏற்படும். இந்த பிரச்னை பல இடங்களில் காணப்படுகிறது.
குறைந்த மின்னழுத்தம் ஏற்படும்போது, வீடுகளில் மின் விசிறி, மிக்ஸி, மோட்டார் பம்ப் உள்ளிட்ட சாதனங்கள் இயக்க, கூடுதல் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக, 10 சதவீதம் வரை கூடுதலாக பயன்படுத்தப்படும் நிலை ஏற்படுகிறது. அதற்கு ஏற்ப, மின் கட்டணமும் அதிகரிக்கும்.
தற்போது, மின் கட்டணம் அதிகம் வந்துள்ள வீடுகளின் மீட்டர்களை ஆய்வு செய்வதுபோல், அந்த இடங்களில் உள்ள மின் வினியோக சாதனங்களையும் ஆய்வு செய்ய உள்ளோம்.
மின்னழுத்த பிரச்னை இருந்தால், புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவுவது உள்ளிட்ட பணிகளை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.