"நான் ஒண்ணும் ரோபோ இல்ல".. அதிவேக அரைசதம் அடித்து விட்டு சஞ்சு சாம்சன் பேச்சு.. என்ன சொன்னார்?
"நான் ஒண்ணும் ரோபோ இல்ல".. அதிவேக அரைசதம் அடித்து விட்டு சஞ்சு சாம்சன் பேச்சு.. என்ன சொன்னார்?
டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெறும் 20 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்த சஞ்சு சாம்சன், சமூக வலைதளங்களில் தன்னை நோக்கி வரும் கடுமையான விமர்சனங்களை எவ்வாறு சமாளிக்கிறார் என்பது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
முதல் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் கடுமையாக விமர்சித்தனர். இதற்குப் பதிலடியாக 2-வது போட்டியில் 22 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைத் தேடித் தந்தார்.
போட்டிக்குப் பிறகு இந்த விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதிகப்படியான விமர்சனங்கள் வரும்போது எனது செல்போனில் வைஃபை வசதியை ஆப் செய்துவிடுவேன்" என்று சிரித்தபடியே கூறினார் சஞ்சு சாம்சன்.
தொடர்ந்து பேசிய அவர், "விமர்சனங்களைப் பார்த்து எனக்கு வலிக்காது என்று சொல்ல நான் ஒன்றும் இயந்திரமோ அல்லது ரோபோவோ கிடையாது. எனக்கும் மனக்கஷ்டம் இருக்கும். ஆனால், ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்வது இயல்பானது. இணையதள கமெண்ட்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் என்னால் மைதானத்தில் இப்படி சுதந்திரமாக ஆட முடியாது. பந்தை அடிக்கும் முன் பத்து முறை யோசிக்க வேண்டியிருக்கும்" என்றார்.
டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் அடித்து இந்தியாவுக்குக் கோப்பை வென்று கொடுத்த தருணங்கள் தனக்கு மிகப்பெரிய மனப்பக்குவத்தைத் தந்ததாகவும், வெளிப்புற சத்தங்களைக் கடந்து அணிக்காக முழு திறமையை வெளிப்படுத்துவதே தனது நோக்கம் என்றும் சஞ்சு சாம்சன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 159 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 14.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்கூட்டியே கைப்பற்றியுள்ளது.