நான் பேசியதை திரித்து அரசியல் செய்கின்றனர் : அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
சென்னை: ''நான் பேசியதை திரித்து அரசியல் செய்கின்றனர்,'' என, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
சட்டசபையில் அவர் பேசியது:
மதுரை மாவட்டத்தில், 'களஞ்சியம் சுய உதவிக் குழு' வாயிலாக, பெண்களிடம் சேமிப்பை ஊக்கப்படுத்தி, வறுமை, கடன் தொல்லையை குறைத்தவர் சின்னப்பிள்ளை.
அவரை பாராட்டி, 2001ல், 'ஸ்ரீ சக்தி புரஸ்கார்' விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கும் விழாவில், அன்றைய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளையின் பாதங்களில் விழுந்து ஆசி பெற்றார். அதுவும், சின்னப்பிள்ளையின் செயலுக்கான ஒரு அங்கீகாரம் தான்.
தற்போது, மதுரையில் இயங்கும், 'ஹைடெக் அராய்' என்ற ஆட்டோமொபைல் உதிரி பாக நிறுவனத்திற்கு, சின்னப்பிள்ளையின், களஞ்சியம் சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக, 'ஓ- ரிங்' எனப்படும், சிறிய ரப்பரால் செய்யப்பட்ட, காற்று, திரவம் வெளியேறாமல் இருக்க பயன்படுத்தப்படும், 'காஸ்கெட்' செய்து தரப்பட்டது.
சின்னப்பிள்ளை தொடர்பாக, நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும், நுணுக்கமாக பிரித்து, எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.