நேப்பாள வெள்ளம்: இறுதி நாள் துக்கம் & மீட்புப் பணிகள்
காத்மாண்டு: நேப்பாளப் பேரிடரில் உயிரிழந்தோருக்கான 13வது நாள் துக்கம் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) கடைப்பிடிக்கப்பட்டது.
பேரிடரில் உயிரிழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில் நேப்பாளத்தில் அரசாங்க அலுவலகங்களிலும் வெளிநாடுகளில் உள்ள நேப்பாள தூதரகங்களிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
இந்துக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நேப்பாளத்தில் 13வது நாள், துக்கத்தை அனுசரிப்பதற்கான இறுதி நாளாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, அண்மைய நாள்களில் நால்வர் உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து தேடல், மீட்புப் பணிகளை அரசாங்கம் தொடர்கிறது.
ஆகஸ்ட் 26ஆம் தேதி நேப்பாளத்தின் இமயமலைக்கும் திபெத்துக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பனிப்பாறை ஒன்று உடைந்துவிழுந்ததில் திடீர் வெள்ளம் பெடுக்கெடுத்தது.
அதில் பல கிராமங்கள் அடித்துச்செல்லப்பட்டதுடன் சாலைகளும் பாலங்களும் சேற்றில் மூழ்கின.
வெள்ளத்தில் குறைந்தது 1,380 பேர் மாண்டனர். 5,500க்கும் அதிகமானோரைக் காணவில்லை.
கடந்த சனிக்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து நால்வரைத் தேடல், மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். அவர்களில் ஒருவர் சீன நாட்டவர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அதற்குமுன் கடந்த வெள்ளிக்கிழமை வேறொரு சுரங்கத்திலிருந்து இரண்டு நீர்மின் நிலைய ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் ஒரு பெண், சேற்றில் புதைந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட வட்டாரத்தில் உள்ள நீர்மின் நிலையங்களில் உயிர் பிழைத்தவர்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் மீட்புப் பணியாளர்கள் அங்குக் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
திபெத்தில் காணாமற்போன நூற்றுக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் வேளையில், பணியாளர்கள் மேலும் 12 சடலங்களை மீட்டதாகச் சீன நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேடல் பணிகளுக்கு இடையே மாண்டோருக்குத் துக்கம் அனுசரிக்க பெரிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்யவில்லை.