📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 06, 2026 03:31 AM

நேர்மையான, திறமையான, நல்லாட்சியை வழங்குவோம்

நேர்மையான, திறமையான, நல்லாட்சியை வழங்குவோம்

பட்ஜெட் உரையானது காலை 10.01 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12.32 மணிக்கு நிறைவடைந்தது.

தமிழகத்தில் நேர்மையான, திறமையான, நல்லாட்சியை வழங்குவோம் என நிதியமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்.

பொது பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டசபையில், 2026-27 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துறை சார்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர்.

பொது பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் வாழ்த்து பெற்றார். இதன்பின்னர் சபாநாயகர் பிரபாகர் அவைக்கு வருகை தந்ததும், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தந்தனர்.

இதனை தொடர்ந்து, தமிழக சட்டசபையில், 2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து பேசினார்.

இரண்டு மடங்கு

அப்போது அவர், த.வெ.க.வின் வெற்றி தமிழக மக்களின் வெற்றி. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆட்சி நடத்துகிறார். ஊழலற்ற அரசை தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடத்துகிறார். தமிழக அரசின் நிதிச்சுமை இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. திட்டங்களை செயல்படுத்த நிதி ஆதாரம் குறைவாக உள்ளது.

நிதி நெருக்கடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார். தொடர்ந்து அவர் பல்வேறு துறை சார்ந்த நிதி ஒதுக்கீடுகள், பல்வேறு திட்டங்கள் தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட விவரங்களை பற்றி அவையில் உரையாற்றினார்.

கூடுதல் வருவாய்

பட்ஜெட் உரையின்போது, அரசு, குறுகிய கால அரசியல் ஆதாயங்களில் கவனம் செலுத்தப்போவதில்லை என அவர் கூறினார். தமிழக நிதி நிலையை சீராக்க 2 வருடங்கள் தேவையாக உள்ளது. முந்தைய அரசு போல் இல்லாமல் நேர்மையான, திறமையான, நல்லாட்சி வழங்க உள்ளோம். கூடுதல் வருவாயை ஈட்ட அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்று கூறினார்.