📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 08, 2026 05:30 PM

நேரு, செ.பா

நேரு, செ.பா

நேரு, செ.பா-வை தொடர்ந்து சிக்கும் மா.சு..? சிக்கலில் திமுக..!

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களைச் சுற்றி அடுத்தடுத்து சட்டச் சிக்கல்கள் எழுந்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

சென்னை கிண்டி தொழிலாளர் காலனி நிலம் தொடர்பான வழக்கில், மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் சிட்கோ சார்பில் எஸ்.கே.கண்ணனுக்கு ஒதுக்கப்பட்ட நிலம், மா.சுப்பிரமணியன் சென்னை மாநகர மேயராக இருந்தபோது முறைகேடாக அவரது மனைவி பெயருக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

குற்றச்சாட்டு பதிவு செய்யும் கட்டத்தில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான மா.சுப்பிரமணியன் மற்றும் காஞ்சனா, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் தெரிவித்தனர். ஆனால், அவர்களின் மறுப்பைத் தொடர்ந்து, இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் நீதிபதி சி.சஞ்சய் பாபா முறைப்படி பதிவு செய்தார்.

இதையடுத்து வழக்கின் அடுத்தகட்டமாக சாட்சி விசாரணை வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி தொடர்பான பல்வேறு வழக்குகள் அரசியல் ரீதியாக பேசுபொருளாகியுள்ள நிலையில், மா.சுப்பிரமணியன் மீதான இந்த வழக்கும் தற்போது கவனம் பெற்றுள்ளது.

குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதாக இதனை கருத முடியாது என்றாலும், வழக்கு விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.