நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
சென்னை: நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அந்த தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக வெளியான புகாரையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு, இன்று மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. இதனிடையே நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. மேலும் நீட் தேர்வில் இதுவரை பலமுறை முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதால் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உட்பட பலர் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேவையில்லை, மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில், சென்னையில் நேற்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்ற மாணவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்றபோது போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
போலீஸார் கைது செய்ய தொடங்கியதும் மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்த மாணவர்களை காவலர்கள் குண்டுக் கட்டாக கைது செய்து பேருந்துகளில் ஏற்றி அருகே இருந்த சமுதாய நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே போலீஸாருக்கும்- போராட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது பெண் காவலர்கள் உட்பட 5 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது.