📅 Friday, 31 July 2026 IST | ஆடி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 31, 2026 12:33 PM

நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரை; அனுமதி மறுத்த தவெக அரசு; "அதிர்ச்சியளிக்கிறது"

நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரை; அனுமதி மறுத்த தவெக அரசு; "அதிர்ச்சியளிக்கிறது"

நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரை; அனுமதி மறுத்த தவெக அரசு; "அதிர்ச்சியளிக்கிறது"- திருமாவளவன் கண்டனம்

நீட் தேர்வுக்கு எதிரான தி.க பரப்புரைக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி தலைமையில் சென்னையில் நேற்று (ஜூலை 30) நடைபெறவிருந்த இருசக்கர வாகனப் பிரசாரப் பயணத்துக்குத் தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராகவும், முன்னேறிய வகுப்பிலுள்ள ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரியும் திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுக்க வாகனப் பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த 18-ம் தேதியே அனுமதி கேட்டபோது, அந்தந்தக் காவல் நிலையங்களில் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் எனக் காவல்துறையினர் முதலில் தெரிவித்துள்ளனர்.

தற்போது கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென காவல்துறை தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.

அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதேப் போல தவெக அரசின் கூட்டணியில் இருக்கும் விசிக கட்சி-யின் தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில், ``திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும். ‘நீட்’ தேர்வையும், முன்னேறிய சமூகத்தினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டையும் முழுமையாக இரத்து செய்ய வேண்டுமென 30-07-2026 முதல் 02-08-2026 வரை இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் அணி, மற்றும் மகளிர் பாசறை ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.

உரிய முறைப்படி முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தும் அதற்குக் காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக விரோத நடவடிக்கை ஆகும்.

'நீட்' தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலுசேர்க்கக்கூடிய திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது.

திராவிடர் கழகத்தின் இந்தப் பரப்புரைக்கு அனுமதி வழங்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.