பாகிஸ்தான் சாதனை வெற்றி.. 49 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீசை போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வீழ்த்தியது
பாகிஸ்தான் சாதனை வெற்றி.. 49 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீசை போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வீழ்த்தியது
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து 8 டெஸ்ட் போட்டிகளில் தோற்று வந்த பாகிஸ்தான் அணி, தனது தொடர் தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மேலும், 49 ஆண்டுகளுக்குப் பிறகு போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் பாகிஸ்தான் பதிவு செய்த முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 344 ரன்களும், பாகிஸ்தான் 387 ரன்களும் எடுத்தன. இதனால் 43 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணியின் 2வது இன்னிங்ஸை சுழற்பந்து வீச்சாளர்கள் சஜித் கான், அலி உஸ்மான் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் 117 ரன்களுக்கு சுருட்டியது. சஜித் கான் 32 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களும், அலி உஸ்மான் 39 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணிக்கு 75 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் 9 ரன்களிலும், அஸான் அவாய்ஸ் 18 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அப்துல்லா ஷபிக் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் நிதானமாக விளையாடி தலா 24 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
ஜோமல் வாரிகன் வீசிய ஓவரில் பாபர் அசாம் அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 77 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் காயமடைந்த ஷான் மசூத்துக்குப் பதிலாக கடைசி நேரத்தில் மாற்று வீரராகக் களம் இறங்கிய அப்துல்லா ஷபிக் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
கடைசியாக 1977ல் முஷ்டாக் முகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கு டெஸ்ட் போட்டியில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி குறித்துப் பேசிய கேப்டன் பாபர் அசாம், "இந்த வெற்றி பெற்றது திருப்தி அளிக்கிறது. திட்டங்களை சரியாகச் செயல்படுத்தியதே இந்த வெற்றிக்குக் காரணம்" என்றார்.