பாண்டிச்சேரி அணிக்கதக விளையாட போகும் பஞ்சாப் கிங்ஸ் அதிரடி வீரர்
பாண்டிச்சேரி அணிக்கதக விளையாட போகும் பஞ்சாப் கிங்ஸ் அதிரடி வீரர்
சந்திகார்: பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை கேப்டனும், முன்னணி ஐபிஎல் பேட்டருமான ஷஷாங்க் சிங், 2026-27 உள்நாட்டு கிரிக்கெட் சீசனுக்காக சத்தீஸ்கர் அணியில் இருந்து புதுச்சேரி அணிக்கு மாற முடிவு செய்துள்ளார்.
எதிர்வரும் உள்நாட்டு சீசனில் புதுச்சேரி அணியில் ஷஷாங்க் சிங் மற்றும் மும்பை அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பிரசாத் பவார் ஆகியோர் விளையாடுவார்கள் என்றும், மூன்றாவது வீரர் இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி செய்யப்படுவார் என்றும் புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஷஷாங்க் சிங் "ஆமாம், நான் சத்தீஸ்கர் அணியில் இருந்து விலகுகிறேன். சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளேன், மேலும் 2026-27 சீசனில் இருந்து புதுச்சேரி அணிக்கு மாறுகிறேன். கடந்த சீசனில் எனக்கு தோள்பட்டை மற்றும் வலது கை விரலில் கடுமையான எலும்பு முறிவு காயங்கள் ஏற்பட்டன.
ஆனால், இந்த கடினமான காலத்தில் சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் எனக்கு எந்த ஆதரவும் அளிக்கவில்லை. மேலும், சத்தீஸ்கர் கிரிக்கெட் பிரீமியர் லீக் 2026 தொடருக்கான வீரர்களின் பட்டியலில் எனது பெயரை அவர்கள் சேர்க்கவில்லை. பெங்களூருவில் நடந்த சீசனுக்கு முந்தைய பயிற்சி முகாமில் பங்கேற்ற சத்தீஸ்கர் அணியிலும் என் பெயர் இடம்பெறவில்லை. என் பெயரை ஏன் சேர்க்கவில்லை என்று நான் கேட்டதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை" என்றார்.
"நான் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாட விரும்புகிறேன் என்றும், உள்நாட்டு கிரிக்கெட்டில் சத்தீஸ்கர் அணிக்காக விளையாட விரும்பவில்லை என்றும் என் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், கடந்த 2025 பிப்ரவரியில், 2023-24 சீசனுக்கான டி20, ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆல்-ரவுண்டருக்கான மதிப்புமிக்க லாலா அமர்நாத் விருதை பிசிசிஐ எனக்கு வழங்கியது. அதன் மூலம் நான் இந்தியாவின் சிறந்த வெள்ளை-பந்து ஆல்-ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டேன் என்பதே உண்மை" என்று விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில், சமையல்காரர் விபேந்திர சிங்கை தாக்கியதாக ஷஷாங்க் சிங் மற்றும் அவரது தந்தையான ஓய்வு பெற்ற சிறப்பு காவல்துறை இயக்குநர் ஜெனரல் (Special DGP) சைலேஷ் சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஷஷாங்க், "என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நான் விடுவிக்கப்பட்டுவிட்டேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற ஷஷாங்க் முக்கிய பங்காற்றினார். அத்தொடரில் 153.51 ஸ்டிரைக் ரேட்டில் 350 ரன்கள் குவித்த அவர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெறும் 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.