பாத்தாம் முனைய அதிகாரிகளைச் சந்தித்த சிங்கப்பூர்க் கடலோர அதிகாரிகள்
இந்தோனீசியாவின் 81வது சுதந்திர தினத்தையொட்டி சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் கடலோரத் தளபத்தியம், இந்தோனீசியாவின் பாத்தாம் சென்டர் முனையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அன்பளிப்புகளை வழங்கியுள்ளது.
கடலோரத் தளபத்திய தளபதியான உதவி ஆணையர் புவா சியூ ஹுவாவின் தலைமையில் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், பாத்தாம் சென்டர் முனையத்திற்குத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) சென்றனர்.
பாத்தாம் சென்டர் முனைய அதிகாரிகளுக்கு வழங்கிய அன்பளிப்புகள், இருதரப்புக்கும் இடையிலான உறுதியான பங்காளித்துவத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
“அணுக்கமான ஒத்துழைப்புமூலம் இருநாட்டின் கடலோரக் குடிநுழைவுச் சாவடிகளில் பாதுகாப்பான, தடையற்ற பயண அனுபவத்தைத் தருவதில் உறுதியாக இருக்கிறோம்,” என்று ஆணையம் குறிப்பிட்டது.
இருநாடுகளும் அவற்றின் அரசதந்திர உறவின் 60ஆம் ஆண்டு நிறைவை அடுத்த ஆண்டு அனுசரிக்கவிருக்கின்றன.
ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் - இந்தோனீசியத் தலைவர்கள் சந்திப்பில், இருநாடுகளும் நம்பிக்கைக்குரிய பங்காளிகள் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
“நமது பங்காளித்துவம் ஆழமானது. இருதரப்பும் இணைந்து அதிகமான வாய்ப்புகளை உருவாக்க முடியும்,” என்றார் அவர்.
கரிமப்புள்ளி ஒருங்கிணைப்பு, தற்காப்புக் கூட்டமைப்பு, எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட அடங்கிய 18 ஒப்பந்தங்களை சிங்கப்பூர், இந்தோனீசியத் தலைவர்கள் பரிமாறிக்கொண்டனர்.