பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி
பாட்னா: பிகாரின் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில் பாஜகவும் மத்திய பிரதேசத்தின் டட்டியா தொகுதியில் காங்கிரசும் வென்றன.
பிகாரின் பங்கிபூர், குஜராத்தின் மஞ்சல்பூர், மத்திய பிரதேசத்தின் டட்டியா ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் திங்கட்கிழமை எண்ணப்பட்டன. பிகாரின் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் நீரஜ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் ரேகா குமாரி, ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதலே பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் இருந்தார். அவர் 64,151 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் நீரஜ் குமாருக்கு 44,827 வாக்குகளும் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ரேகா குமாரிக்கு 14,273 வாக்குகளும் கிடைத்தன.
இந்தத் தேர்தல் குறித்துப் பேசிய பிரசாந்த் கிஷோர், “குற்றப்பின்னணி உடைய ஒருவரை பிகாரின் முதல்வராக பாஜக தலைமை நியமித்து உள்ளது. அவரை மாற்றிவிட்டு நல்ல தலைவரை முதல்வராக நியமிக்க வேண்டுகிறேன். பங்கிபூர் இடைத்தேர்தல் மூலம் இந்தக் கருத்தை மக்கள் முன்னிறுத்தி உள்ளனர்,” என்று குறிப்பிட்டார்.
குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட சதீஷ் படேல், 55,481 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பிக்காபாய் ரபாரிக்கு 24,851 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
மத்திய பிரதேசத்தின் டட்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் 66,757 வாக்குகள் பெற்று வென்றார். பாஜக வேட்பாளர் அசுதோஷ் திவாரிக்கு 60,741 வாக்குகள் கிடைத்தன.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக பிகாரில் நடைபெற்ற போராட்டங்களின்போது மாணவ, மாணவியர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் ஜென்-ஸி இளையரின் வாக்குகள் கிடைக்காததால் பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.