போனில் வந்த ஆதவ்; தினமும் முதல்வருக்கு அப்டேட்; எப்படி இருக்கிறார் கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு?
போனில் வந்த ஆதவ்; தினமும் முதல்வருக்கு அப்டேட்; எப்படி இருக்கிறார் கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு?
மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார் கொளத்தூர் தொகுதி த.வெ.க MLA வி.எஸ்.பாபு. பல்துறை மருத்துவர்கள் குழு அவரைக் கண்காணித்து வரும் நிலையில், உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு, அவரை தேர்தலில் தோற்கடித்தவர் த.வெ.க-வின் வி.எஸ்.பாபு.
வெற்றிப் பெற்றவுடன், 'its over' என்பதுபோல அவர் காட்டிய கை செய்கைகளும் மீசையை முறுக்கும் ஸ்டைல் போஸ்களும் இணையத்தில் படு வைரலாகின. தி.மு.க-வினர் மத்தியில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கும் வி.எஸ்.பாபுவுக்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது.
75 வயதாகும் வி.எஸ்.பாபுவுக்குச் சமீபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யபட்டவருக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
வி.எஸ்.பாபுவுக்கு நெருக்கமான கட்சிப் பிரமுகர்கள் சிலர் நம்மிடையே பேசுகையில், "சட்டமன்றக் கூட்டத்தொடரில் தொடர்ச்சியாகக் கலந்துக்கொண்டவருக்கு, அங்கிருந்த ஏ.சி குளிர் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், சமீபகாலமாக நெஞ்சு சளியால் அவதிப்பட்டு வந்தார். சரியாக உணவையும் அவரால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
கடந்த செப்.9-ம் தேதி இரவு, உடம்பிலுள்ள சுகரின் அளவு குறைந்து, திடீரென சோர்ந்திருக்கிறார். இதனால், ஆக்சிஜன் அளவும் குறைந்துவிட்டது. உடனடியாக, நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அவரை அழைத்து வந்துவிட்டனர்.
ஆம்புலன்ஸில் ஏறாமல் தன்னுடைய காரிலேயேதான் மருத்துவமனைக்கு வந்தார் வி.எஸ்.பாபு. நடந்தேதான் மருத்துவமனைக்குள்ளும் சென்றார். வயதுக்கேற்ற தளர்ச்சியும் சளி தொந்தரவும் இருப்பதால்தான் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்த்தவுடன் முதல்வர் விஜய் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
'லண்டன் சென்றுவிட்டு வந்து நேரில் பார்க்கிறேன். உடம்பைப் பார்த்துக்கோங்க...' என்று ஆறுதல் சொன்னார் முதல்வர். தொடர்ச்சியாக, அமைச்சர்கள் அருண்ராஜ், மரிய வில்சன், நிர்மல்குமார், ப.குமார் உள்ளிட்டவர்களும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரும் நேரில் வந்து வி.எஸ்.பாபுவின் உடல்நிலையைக் கேட்டறிந்தனர். லண்டனில் இருந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
இப்போதைக்கு, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. இன்னும் நான்கைந்து நாள்களில் ஐ.சி.யூ-வில் இருந்து அவர் மாற்றப்படுவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். தினம்தோறும் மருத்துவர்களிடமிருந்து அப்டேட் கேட்டு தெரிந்துக் கொள்கிறார் சுகாதாரத்துறை அமைச்சரான அருண்ராஜ்.
அந்தத் தகவல் முதல்வருக்கும் அப்டேட் செய்யப்படுகிறது. லண்டனில் இருந்து திரும்பியவுடன், முதல்வரும் நேரில் வந்து நலம் விசாரிக்கவுள்ளார்" என்றனர்.
மூச்சுத்திணறல் காரணமாக அட்மிட் செய்யப்பட்டிருக்கும் வி.எஸ்.பாபு, கடந்த சில மாதங்களாக மன வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, "நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்த்து காரைக்குடியில் வென்ற டி.கே.பிரபு அமைச்சராகிவிட்டார். பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்திரராஜனை மயிலாப்பூரில் வென்ற வெங்கட்ரமணன் அமைச்சராகிவிட்டார். ஆனால், முன்னாள் முதல்வர் ஸ்டாலினைத் தோற்கடித்தும் உங்களை அமைச்சராக்கவில்லையே, ஏன்..." என்று கட்சி நிர்வாகிகள் வி.எஸ்.பாபுவைக் குடைந்தெடுத்திருக்கிறார்கள். அதிலேயே அவரது மனம் நொந்துபோய் சோர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
"சட்டமன்றக் கூட்டத்தொடர் சமயத்தில், கொளத்தூர் தொகுதியின் வளர்ச்சி குறித்து கலந்தாலோசனை நடத்திய முதல்வர் விஜய்யிடம், தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார் வி.எஸ்.பாபு. 'இதையெல்லாம் என் கவனத்துக்கே யாரும் கொண்டு வரவில்லையே...' என்று முதல்வரும் விசனப்பட்டிருக்கிறார். வடசென்னையின் வளர்ச்சிக்கு வி.எஸ்.பாபுவைப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கும் முதல்வர் விஜய், விரைவிலேயே அவருக்கு உரிய அங்கீகாரத்தை அளிப்பார்.." என்கிறார்கள் த.வெ.க-வின் சீனியர்கள்.