பப்ளிசிட்டிக்காகவா பண்ணேன்? விஜய் டிவி ஆபரை தூக்கி எறிந்த ஜாய்.. இன்ஸ்டாவில் அதிரடியான போஸ்ட்!
சென்னை: பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகாரளித்துச் சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜாய் கிரிஸில்டா. தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் தன்னை பற்றி பரவி வரும் வதந்திக்கு அதிரடியான பதிலளித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகத் ஜாய் கிரிஸில்டா தொடரப்பட்ட வழக்கின் முடிவில், நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்குத் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, குழந்தையின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் ஜாய் கிரிஸில்டாவுடன் இணைந்து கோவிலில் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழாவையும் கோலாகலமாக நடத்தினார்.
பிக் பாஸ் 10 சர்ச்சை: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான 'பிக் பாஸ் சீசன் 10' வீட்டிற்குள் ஜாய் கிரிஸில்டா போட்டியாளராக செல்ல போகிறார் என்ற தகவல் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாக பரவியது. இந்த வதந்தி பரவிய உடனே, நெட்டிசன்கள் சிலர், இப்போதுதான் இந்த போராட்டத்தின் பின்னணி புரிகிறது. எல்லாமே பிக் பாஸ் வாய்ப்புக்கும் பப்ளிசிட்டிக்கும் தானா? எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து ஜாய் கிரிஸில்டாவைக் காயப்படுத்தத் தொடங்கினர்.
அதிரடி விளக்கம்: தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கும், பிக் பாஸ் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "A HEARTFELT UPDATE" என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக நான் பிக் பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் செல்ல போவதாக பரவிய செய்திகளுக்கு பிறகு, எனக்குக கிடைத்த அன்பும் ஆதரவும் நெகிழ வைக்கிறது. முதலாவதாக, என்னை இந்த அருமையான வாய்ப்பிற்குத் தேர்ந்தெடுத்த விஜய் டிவிக்கு (VIJAY TV) எனது மனமார்ந்த நன்றிகள். ஆனால், நான் தெளிவுபடுத்த விரும்புவது என்னவென்றால்... நான் பிக் பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் செல்லப்போவதில்லை.
குழந்தை தான் முக்கியம்: இந்த வாய்ப்பை மறுப்பதற்கு முதன்மையான காரணம் என்னுடைய குட்டி செல்லம் ராகா தான். அவன் இன்னும் ரொம்பவே சிறிய குழந்தை. அவனை தனியாக விட்டுவிட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வது ஒரு தாயாக எனக்கு சரியாகப் படவில்லை. விஜய் டிவி வாய்ப்பளித்த போது, அதை மரியாதையுடன் மறுத்துவிட்டேன். இது எனக்கு சுலபமான முடிவாக இருக்கவில்லை. ஆனால், ஒரு தாயாக எனக்கு எப்போதும் என் குழந்தை தான் முதலிடம்!" எனக் கூறி விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்துள்ளார். இதன் மூலம் பப்ளிசிட்டிக்காகத்தான் இதையெல்லாம் செய்தார் என பழிசுமத்திய நெட்டிசன்களுக்கு, எனக்கு பிக் பாஸ் ஷோவை விட என் குழந்தை தான் முக்கியம் எனத் தனது தாய்மையின் மூலம் சரியான பதிலடியை கொடுத்துள்ளார் ஜாய் கிரிஸில்டா.