பும்ரா குறித்து வெளியான சோக செய்தி.. பிசிசிஐயிடம் தகவல் சொன்ன சிறப்பு மையம்
பும்ரா குறித்து வெளியான சோக செய்தி.. பிசிசிஐயிடம் தகவல் சொன்ன சிறப்பு மையம்
மும்பை: ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள தொடர் காயம் காரணமாக, 2027 உலகக் கோப்பைக்கு பிறகு அவர் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடக்கூடும் என்று அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது. இதனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போன்ற நீண்ட வகை போட்டிகளில் பும்ரா இல்லாத ஒரு சூழலுக்கு இந்திய அணி தயாராக வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, பும்ரா தனது இடது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைப்பில் உடற்தகுதி மீட்புப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக அவர் இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த ஜூலை 16 ஆம் தேதி கார்டிஃப் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு பும்ரா பந்துவீசவில்லை. கார்டிஃப் ஒருநாள் போட்டியின் போது ஃபீல்டிங் செய்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் விளையாடவில்லை என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.
"இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பும்ராவின் பணிச்சுமையை அதிகரிப்பதில் CoE தீவிரமாக செயல்பட்டு வந்தது. ஆனால், அவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் குணமடைய வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது. அவர் டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசி நீண்ட நாட்களாகிவிட்டது" என்று சிஒஇ வட்டார தகவல் தெரிவிக்கின்றன,
"CoE பும்ராவின் உடல்நிலை குறித்து மிகவும் கவனமாக உள்ளது. அவரது கம்பேக் எந்தவொரு காலக்கெடுவையும் அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. எது எப்படியிருந்தாலும், அடுத்த ஆண்டுக்கு பிறகு குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் பும்ரா இல்லாத ஒரு எதிர்காலத்திற்கு இந்திய கிரிக்கெட் தயாராக வேண்டும்" என்றும் அந்த வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. இதனால் அவர் ஐபிஎல் 2026 தொடர் மற்றும் அதற்குப் பின் நடைபெற்ற இருதரப்பு தொடர்களில் விளையாடும் வாய்ப்பு ஏற்படவில்லை.